சீனாவின் சினோஃபார்ம், ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் ஜான்சென் கொவிட்-19 தடுப்பூசிகளைப் பயன்படுத்த மலேசிய அரசாங்கம் நிபந்தனையுடன் ஒப்புதல் வழங்கி இருக்கிறது.
“தடுப்பூசிகளின் தரம், பாதுகாப்பு, செயல்திறன் தொடர்பான அண்மைய தகவல்கள் தொடர்ந்து பெறப்பட்டு, அவ்வப்போது மதிப்பிடப்படும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் அவ்விரு தடுப்பூசிகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது,” என்று சுகாதாரத் துறையின் தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.
தடுப்பூசிகளால் ஏற்பட வாய்ப்புள்ள இடர்களைக் காட்டிலும் அவற்றால் கிடைக்கக்கூடிய பலன்கள் மிகுதியாக இருப்பதை உறுதிசெய்யவே இந்த நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
முன்னதாக, ஃபைசர்-பயோஎன்டெக் தடுப்பூசி விநியோகம் போதுமான அளவில் இருப்பதால் நேற்று முன்தினத்துடன் சினோவேக் தடுப்பூசி போடுவது நிறுத்தப்படும் என்று மலேசியா அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, புதிய சாதனையாக அங்கு நேற்று முன்தினம் ஒரே நாளில் 460,158 பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டது என்று அந்நாட்டின் சுகாதார அமைச்சர் டாக்டர் ஆதம் பாபா தெரிவித்தார்.
அவர்களில் 304,807 பேர் இரண்டாம் முறையாகவும் 155,351 பேர் முதன்முறையாகவும் கொவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொண்டனர். இதையடுத்து, இதுவரை அங்கு மொத்தம் 13,107,716 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.
இந்நிலையில், மலேசியாவில் நேற்று முன்தினம் 13,215 பேருக்குக் கிருமித்தொற்று உறுதியான நிலையில், நேற்று அந்த எண்ணிக்கை 12,541 என்று குறைந்தது.
இதற்கிடையே, சிலாங்கூர் மாநிலத்தின் பெரும்பகுதியிலும் கோலாலம்பூரின் சில பகுதிகளிலும் நடப்பிலிருந்த கடுமையான நடமாட்டக் கட்டுப்பாடுகள் நேற்றிரவு முதல் தளர்த்தப்பட்டன.