மத்திய அரசுக்கும் தெலுங்கானா அரசுக்கும் இடையே வலுக்கும் மோதல்
ஹைதராபாத்: ஒரே வாரத்தில் இரண்டு அமைச்சர்களின் வீடுகளில் வருமானவரித் துறையினர் அடுத்தடுத்து சோதனை நடவடிக்கை மேற்கொண்டது தெலுங்கானா மாநில அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வருமானவரித் துறையினரின் இந்த நடவடிக்கையால் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளதாக ஊடகத் தகவல் தெரிவிக்கிறது.
தெலுங்கானா அரசுக்கும் மத்திய அரசுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் அதிகரித்து வருகின்றன.
பிரதமர் மோடி தெலுங்கானா மாநிலத்துக்கு வருகை தரும்போது, மாநில முதல்வர் என்ற அடிப்படையில் பிரதமரை வரவேற்க விமான நிலையம் செல்வதை தவிர்த்து வருகிறார் முதல்வர் சந்திரசேகர ராவ்.
அண்மையில் தனது கட்சி எம்எல்ஏக்கள் நான்கு பேரை பாஜக வசம் இழுக்க தலா ரூ.100 கோடி வரை பேரம் பேசப்பட்டதாக ஆளும் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி சாடியது. இது தொடர்பாக பாஜக ஆதரவாளர்கள் நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.
மேலும், தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனுடனும் மாநில அரசுக்கு சுமூக உறவில்லை. ஆளுநர் பங்கேற்கும் நிகழ்ச்சியை முதல்வர் புறக்கணித்து வருவதாகக் கூறப்படுகிறது.
முதல்வர் சந்திரசேகர ராவ் மகள் காங்கிரஸ் கட்சியில் இணையப் போவதாகப் பேசிய பாஜக நாடாளுமன்ற உறுப்பினரான தர்மபுரி அரவிந்த் என்பவரது வீட்டின் மீது தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியினர் தாக்குதல் நடத்தினர்.
இந்நிலையில், மத்திய வருமானத் துறையினர் தனது கட்சியின் முக்கியத் தலைவர்களைக் குறிவைத்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக முதல்வர் சந்திரசேகர ராவ் சாடி உள்ளார்.
கடந்த வாரம் தெலுங்கானா அமைச்சர் கங்குலா கமால்கர் வீடுகள், அவருடன் தொடர்புள்ள இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.
அந்தப் பரபரப்பு அடங்கும் முன்பாகவே, நேற்று முன்தினம் மாநில அரசில் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக உள்ள மல்லா ரெட்டியின் வீடு, அவருக்குச் சொந்தமான மற்ற இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடிச் சோதனை நடவடிக்கை மேற்கொண்டனர்.
ரங்காரெட்டி மாவட்டத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார் மல்லா ரெட்டி. இவரது குடும்பத்தார் பல்கலைக் கழகம், கல்லூரிகள் நடத்தி வருவதோடு, ரியல் எஸ்டேட் உட்பட பல்வேறு தொழில்களிலும் ஈடுபட்டுள்ளனர்.
இது தொடர்பான அனைத்து இடங்களிலும் சோதனை நடைபெற்றது. மருத்துவ பல்கலைக் கழகம், 14 பொறியியல், மருத்துவக் கல்லூரிகள், உறவினர்களின் வீடுகள் என ஐம்பதுக்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இதில் ஐம்பதுக்கும் மேற்பட்ட குழுக்கள் ஈடுபட்டன.
சோதனையின் முடிவில் இரண்டு கோடி ரூபாய் ரொக்கப் பணம், முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
பீகாரில் சிக்கிய ரூ.100 கோடி
இதற்கிடையே பீகார், டெல்லி, உத்தரப் பிரதேச மாநிலங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சுமார் நூறு கோடி ரூபாய் மதிப்புள்ள கறுப்புப் பணம் குறித்த தகவல்கள் கிடைத்ததாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மூன்று மாநிலங்களிலும் உள்ள முப்பதுக்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டது என்றும் 14 வங்கிக்கணக்குகள் முடக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
சோதனையின்போது கணக்கில் காட்டப்படாத ரூ.12 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், 80 கோடி ரூபாய்க்கு முறைகேடான பரிவர்த்தனை நடந்துள்ளதும் தெரியவந்தது.