ப. பாலசுப்பிரமணியம்
மருத்துவமனையில் முன்பதிவு செய்து செவிப்புலன் சோதனை செய்வது வழக்கமான செயல். ஆனால் அந்த வசதியைக் குடி யிருப்புப் பேட்டைக்குக் கொண்டு வந்துள்ளது தேசிய பல்கலைக் கழக மருத்துவமனை. அது பேருந்து வடிவில் இரு நடமாடும் செவிப்புலன் சோதனை நிலையங் களை அறிமுகம் செய்துள்ளது. ஒவ்வொரு நிலையத்திலும் இரு செவிப்புலன் சோதனை அறைகளும், அதற்கான சாதனங் களும் செவிக்கருவிப் பொருத்தும் வசதிகளும் அமைக்கப்பட்டுள்ளன. அடுத்த ஈராண்டுகளுக்கு 40 வயதுக்கும் அதற்கும் மேற்பட்ட 8,000 குடியிருப்பாளர்கள் அந்த நிலையங்கள் வழி பயன்பெறுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
தங்களது வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் வகையில் 400க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்களுக்கு செவிக்கருவிப் பொருத்தப்படும் என நம்பப்படுகிறது. சமூக மன்றங்கள் அல்லது வசிப்போர் குழு நிலையங்கள் அருகில் இவை காணப்படும். அடுத்தக் கட்டமாக தீவிலிருக்கும் 20க்கும் மேற்பட்ட சமூக நிலையங் களுக்கும் வசிப்போர் குழுக்களுக் கும் இச்சேவையை விரிவாக்கம் செய்ய திட்டம் உள்ளது. அனைத்துலக ஆய்வுகளின்படி, செவிப் பிரச்சினையை எதிர்கொள் ளும் முதியவர்களுக்கு மறதி நோய் (Dementia) அல்லது நினை விழத்தல் நோய் (Alzheimer's disease) வரும் சாத்தியம் அதிகம் உண்டு. அதோடு செவிப் பிரச்சினைக்கு தீர்வு காணாமல் இருந்தால், அது மன அழுத்தம், பதற்றம், விரக்திய டைதல், தனிமைப்படுத்திக்கொள் ளுதல், வாழ்க்கைத் தரத்தில் பாதிப்பு ஆகியவற்றை உண்டாக்கக் கூடும்.
யூஹுவா சமூக மன்றத்தில் நேற்று இந்தத் திட்டத்தை அதிகார பூர்வமாக தொடங்கி வைத்த கலாசார, சமூக, இளையர் துறை அமைச்சர் கிரேஸ் ஃபூ, செவி ஆரோக்கியத்தைப் பேணிக்காக்க ஆரம்பக்கால சோதனைக்கும் சிகிச்சைக்கும் செல்வது முக்கியம் எனத் தனது உரையில் வலியுறுத் தினார். இதுவரையில் சுமார் 200 யூஹுவா குடியிருப்பாளர்கள் இந்த நடமாடும் செவிப்புலன் சோதனை நிலையங்களுக்குச் சென்றிருப்பதாக வும் அவர்களில் 80 விழுக்காட்டின ருக்குச் செவி தொடர்புப் பிரச்சினை இருப்பதாக தெரிய வந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
கண்ணாடி அறைக்குள் இருக்கும் முதியவர் செவிப்புலன் பரிசோதனையில் ஈடுபடுகிறார். ஒலி சமிக்ஞைகள் கேட்கமுடிகிறது என்று வெளியே அமர்ந்திருக்கும் அதிகாரியிடம் அவர் கை சைகை வழி தெரிவிக்கிறார். படம்: சாவ் பாவ்