லுசாய்ல்: உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியின் அரையிறுதிச் சுற்றில் உலகின் தலைசிறந்த தற்காப்பு வீரராகக் கருதப்படும் வெர்ஜில் வேன் டைக், உலகின் ஆகச் சிறந்த விளையாட்டாளராகப் போற்றப்படும் லயனல் மெஸ்ஸி இருவரும் நேருக்கு நேர் மோதவுள்ளனர். வேன் டைக்கின் நெதர்லாந்தும் மெஸ்ஸியின் அர்ஜென்டினாவும் காலிறுதிச் சுற்றில் இன்று சந்திக்கின்றன.
இது, காற்பந்து ரசிகர்கள் மிகவும் ஆவலாக எதிர்பார்த்துக் காத்திருக்கும் தருணம். எனினும், இந்த ஆட்டம் தங்களுக்கிடையிலான மோதல் மட்டும் இல்லை என்று கூறியுள்ளார் நெதர்லாந்து அணித் தலைவரான வேன் டைக்.
“இது எனக்கும் மெஸ்ஸிக்கும் அல்லது நெதர்லாந்துக்கும் மெஸ்ஸிக்கும் இடையில் நடைபெறும் ஆட்டம் அல்ல. இது நெதர்லாந்துக்கும் அர்ஜென்டினாவுக்கும் இடையிலான ஆட்டம்,” என்று குறிப்பிட்டார் வேன் டைக்.
உலகின் தலைசிறந்த காற்பந்து வீரர் விருதை ஆக அதிகமாக ஏழு முறை வென்ற மெஸ்ஸிக்கு எதிராக மோதுவது அச்சம் வரவழைக்கும் நிகழ்வா என்று செய்தியாளர் கூட்டத்தில் வேன் டைக்கிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், தங்களுக்கு அச்சம் இல்லை என்றும் திடலில் அர்ஜென்டினா விடுக்கக்கூடிய மிரட்டல் குறித்து கவனத்துடன் மட்டும் இருப்பதாகத் தெரிவித்தார்.
இந்த உலகக் கிண்ணப் போட்டியில் இதுவரை சிறப்பாக விளையாடி வந்துள்ளார் மெஸ்ஸி. குறிப்பாக மெக்சிகோ, ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் அவரைக் கையாள முடியாமல் தவித்தன.
2014ஆம் ஆண்டுப் போட்டியின் அரையிறுதிச் சுற்றில் இவ்விரு அணிகளும் சந்தித்தன. அதில் அர்ஜென்டினா வென்றது.
1998ஆம் ஆண்டுப் போட்டியின் அரையிறுதிச் சுற்றிலும் இரு அணிகளும் மோதின. அதில் வெற்றி கண்டது நெதர்லாந்து.