அதிபர் ஹலிமா யாக்கோப், மலேசிய மாமன்னர் சுல்தான் அகம்மது ஷாவின் அழைப்பை ஏற்று நாளை முதல் மலேசியாவுக்கு மூன்று நாள் அதிகாரத்துவ பயணம் மேற்கொள்கிறார்.
கோலாலம்பூரில் உள்ள மாமன்னரின் வசிப்பிடமான இஸ்தானா நெகாராவில் அதிபர் ஹலிமாவுக்கு அதிகாரபூர்வ வரவேற்பு அளிக்கப்படும். அதிபருக்கு விருந்து அளித்து சிறப்பிக்கப்படும்.
அதிபர் ஹலிமாவின் பெயர் ஆர்க்கிட் மலர் ஒன்றுக்குச் சூட்டப்படும். வெளிநாட்டு தலைவர் ஒருவர் மலேசியாவுக்கு அதிகாரபூர்வ வருகை அளிக்கையில், அந்தத் தலைவரின் பெயர் ஆர்க்கிட் மலருக்குச் சூட்டப்படுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
சிங்கப்பூரின் வெளியுறவு அமைச்சு நேற்று இந்த விவரங்களைத் தெரிவித்தது. தம் மூன்று நாள் பயணத்தின்போது மலேசிய பிரதமர் அன்வார் இப்ராகிமை அதிபர் ஹலிமா சந்திப்பார்.
மலேசிய பெண் அரசியல்வாதிகளையும் அதிபர் சந்திப்பார்.
சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் வேந்தர் என்ற முறையில் அதிபர் ஹலிமா, மலாயா பல்கலைக்கழக வேந்தரும் பேராக் சுல்தானுமான நஸ்ரின் ஷாவை சந்திப்பார்.
அதிபர் ஹலிமா, மலேசியாவுக்கு மேற்கொள்ளும் முதல் அதிகாரபூர்வ பயணம் இதுவே ஆகும். மலேசிய மாமன்னர் 2022 அக்டோபரில் சிங்கப்பூருக்கு வருகை அளித்தார். அதனைஅடுத்து அதிபரின் மலேசிய பயணம் இடம்பெறுகிறது.
மலேசிய பயணத்தின்போது அதிபரும் மலேசிய மாமன்னரும் இஸ்தானா நெகாராவில் மரக்கன்று ஒன்றை நடுவார்கள்.
மலேசிய பயணத்தில் அதிபர் ஹலிமாவுடன் அவரின் கணவர் முகம்மது அப்துல்லா அல்ஹாப்ஷியும் செல்வார். இருவரையும் சிறப்பிக்கும் வகையில் ஆர்க்கிட் மலருக்கு இவர்களின் பெயர் சூட்டப்படும்.
அதிபருடன் அமைச்சர்களும் அதிகாரிகளும் செல்கிறார்கள். அதிபர் வெளிநாடு சென்றிருக்கையில், அதிபர் ஆலோசனை மன்றத்தின் தலைவர் எடி டியோ இடைக்கால அதிபராக இருப்பார்.
அதிபர் ஹலிமா மலேசியாவில் சிங்கப்பூரர்களைச் சந்திப்பார். தொழில்துறை தலைவர்களுடன் உரையாடுவார். வெளிநாட்டு சிங்கப்பூரர்கள் அளிக்கும் விருந்திலும் அவர் கலந்துகொள்வார்.
இதனிடையே, அதிபர் ஹலிமா மலேசியாவின் பெர்னாமா செய்தி நிறுவனத்துக்கு அளித்த மின்னஞ்சல் பேட்டியில் மலேசியாவும் சிங்கப்பூரும் பல துறைகளில் வர்த்தக, முதலீட்டு உறவுகளைப் பலப்படுத்த முடியும்; புதிய துறைகளில் ஒத்துழைக்க முடியும் என்று தெரிவித்தார்.