கோல்கத்தா: இந்தியாவின் 4வது பெரிய மாநிலமாக விளங்கும் மேற்கு வங்கத்தில் உள்ள பிர்பூம் பகுதியில் சிறிய தங்க நாணயங்கள் புதைந்து கிடப்பதாக தகவல் பரவியதால் அங்கு ஏராளமான மக்கள் குவிந்தனர்.
அங்குள்ள பார்கண்டி கிராமத்தில் பாய்கிறது பான்ஸ்லோய் ஆறு. இந்த ஆற்றின் ஓரத்தில் இரண்டு நாட்களுக்கு முன்பு தங்கக் காசுகளை ஒருவர் கண்டெடுத்துள்ளார். தொடர்ந்து தேடியபோது, வேறு சில நாணயங்களும் அவர் கையில் கிடைத்துள்ளன.
இந்நிலையில், நதிக்கரையில் தங்கம் கிடைக்கும் செய்தி காட்டுத்தீ போல் பரவ, பார்கண்டி கிராம மக்கள் ஆற்றின் கரையோரம் குவிந்தனர்.
சிலர் தங்களது கைகளாலும் சிலர் மண்வெட்டிகளாலும் கடப்பாறைகளாலும் மண்ணைத் தோண்டி தங்கத்தை தேடினர்.
அப்போது, சிறிய அளவிலான பழைய நாணயங்கள் கிடைத்துள்ளன. அதில் பழங்கால எழுத்துகளும் அடையாளங்களும் இருந்துள்ளன. வரலாற்றில் அந்தப் பகுதிக்கு அருகில் ‘மகேஷ்பூர் ராஜ்பரி’ என்ற நகரம் இருந்ததாகவும் அது சுபர்ணரேகா நதியில் மூழ்கியதாகவும் நம்பப்படுகிறது. புதைந்த தங்கம் சுபர்ணரேகா நதி வழியாக பான்ஸ்லோய் நதிக்கு வந்திருக்கலாம் என்றும் ஒருசாரார் கூறுகின்றனர்.
இந்த இடத்தை மாவட்ட நிர்வாகத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து ஆற்றின் குறுக்கே காவலர்கள் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தொல்லியல் துறையினரும் அங்கு வந்து ஆய்வு செய்ய உள்ளனர்.