கொவிட்-19 கொள்ளைநோயால் சிங்கப்பூரிலுள்ள மருத்துவமனைகள் நெருக்குதலுக்கு உள்ளாகாமல் இருக்க ‘இடைநிலை பராமரிப்பு வசதிகள்’ (டிசிஎஃப்) செய்து தரப்பட்டன. இருப்பினும் இந்த ‘டிசிஎஃப்’ பெரும்பங்காற்றியதை அடுத்து சிங்கப்பூரின் சுகாதாரப் பராமரிப்பு அமைப்புமுறையின் முக்கிய அங்கமாக அதைத் தக்கவைத்திட அரசாங்கம் முடிவெடுத்துள்ளதாக சுகாதார அமைச்சர் ஓங் யி காங் நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
பொது மருத்துவமனைகளில் மருத்துவ ரீதியாக நிலையாக உள்ள நோயாளிகள், தாதிமை இல்லம் அல்லது தாதிமை இல்லப் பராமரிப்பு போன்ற நீண்டகாலப் பராமரிப்பு ஏற்பாடுகளுக்காக காத்திருக்கும் இடைப்பட்ட காலத்தில் இந்த ‘டிசிஎஃப்’ கைகொடுக்கும்.
அத்துடன் மேற்குப் பகுதியில் இத்தகைய ‘டிசிஎஃப்’ தற்போது இல்லாத காரணத்தால் இங் டெங் ஃபோங் பொது மருத்துவமனைக்கு அருகில் புதிதாக ஒரு ‘டிசிஎஃப்’ வரும் மாதங்களில் அமைக்கப்படும் என்றார் அமைச்சர் ஓங்.
கொவிட்-19 தொடர்பில் சிங்கப்பூரின் செயல்பாடுகள் குறித்து இம்மாதம் 8ஆம் தேதி அன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வெள்ளை அறிக்கையை ஒட்டி நடந்த விவாதத்தில் அவர் இவ்வாறு தெரிவித்தார். அடுத்த கொள்ளைநோய்க்கு சிங்கப்பூரை மேம்பட்ட தயார்நிலையில் வைத்திட அரசாங்கம் அதன் ஏற்பாடுகளை ஆராய்வதே இதன் நோக்கமாகும்.
நாட்டின் மருத்துவமனை ஆற்றலை வலுப்படுத்துவது முக்கியமான ஒரு திட்டமாகும். அதனால் ‘டிசிஎஃப்’ நம் சுகாதாரப் பராமரிப்பு அமைப்புமுறையின் இடைநிலை அல்லது நீண்டகால அம்சமாகவும் ஆகலாம் என்று திரு ஓங் சுட்டினார்.
“நெருக்கடி காலத்தில் நாம் கற்றுக்கொண்ட பாடங்களின் மூலம் சுகாதாரப் பராமரிப்பு அமைப்புமுறையின் பல்வேறு அம்சங்களை மேம்படுத்தி மீள்திறனை மேம்படுத்துவதில் சிங்கப்பூர் உறுதியாக உள்ளது,” என்றார் திரு ஓங்.
அத்துடன் சமூக மருத்துவமனைகள் மற்றும் தாதிமை இல்லங்கள் போன்ற அதன் சமூகம் சார்ந்த பராமரிப்புப் பிரிவை சிங்கப்பூர் தொடர்ந்து விரிவுபடுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதனால் மருத்துவமனைப் படுக்கைகளுக்கான அதிகரிக்கும் தேவையை நிறைவு செய்ய முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மருத்துவச் சிக்கல்கள் உள்ள முதிய நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் இந்தத் தேவை எழுந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதற்கிடையே சுகாதார அமைச்சின்கீழ் நிரந்தரமாக ‘நெருக்கடி உத்திபூர்வ, செயல்பாட்டுக் குழுமம்’ அல்லது ‘சிஎஸ்ஓஜி’ இயங்கும் என்றும் அது நடுத்தர நிலை தொற்றுநோய்களுக்கும் இதர மருத்துவ நெருக்கடிகளுக்கும் தயார்நிலையில் செயல்படும் என்றும் திரு ஓங் கூறினார்.
மேலும், சிங்கப்பூருக்குக் கிடைத்த தடுப்பூசி மருந்தில் சுமார் 15% அளவு, காலாவதியாகிவிட்டது என்றும் அவற்றின் மொத்த மதிப்பு ஏறத்தாழ $140 மில்லியன் என்றும் அமைச்சர் ஓங் தெரிவித்தார்.
மேலும் நாடாளுமன்றச்
செய்திகள் - பக்கம் 2
பெயர் மாற்றம்: ‘சுகாதாரத் தலைமை இயக்குநர்’
சுகாதார அமைச்சின் மருத்துவச் சேவைகளின் இயக்குநர் என முன்னதாக அறியப்பட்டவர், இனி ‘சுகாதாரத் தலைமை இயக்குநர்’ என அழைக்கப்படுவார் என்று அமைச்சர் ஓங் அறிவித்துள்ளார். இவ்வாண்டின் பிற்பாதியில் சுகாதாரப் பாரமரிப்புச் சேவைகள் சட்டத்தில் மாற்றங்கள் செய்யப்படும்போது பேராசிரியர் கென்னத் மாக் இவ்வாறு அழைக்கப்படுவார் என்றார் திரு ஓங். இந்த மாற்றங்களுக்கு இடையே மருத்துவச் சேவைகள், பொதுச் சுகாதாரம் ஆகியவற்றில் சுகாதார அமைச்சு கவனம் செலுத்தும்.