கடந்த சில மாதங்களாக உலகெங்கும் வெப்ப அலைகள் மக்களின் அன்றாட வாழ்வை பாதித்து வருகிறது. இதுவரை காணாத அளவில் ஆசிய நாடுகளில் வெப்பநிலை உச்சத்தைத் தொட்டது.
மே மாதத்தின் முதல் இரண்டு வாரங்களில் சிங்கப்பூரில் அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியசுக்கும் மேலாகப் பதிவாகியது. குறிப்பாக எட்டு தினங்களில் வெப்பநிலை 35 டிகிரி செல்சியசுக்கும் அதிகமாகப் பதிவானது என்று தேசிய சுற்றுப்புற அமைப்பு அறிவித்தது.
லேசான காற்று, தெளிவான வானம் ஆகியவை சிங்கப்பூரின் பல பகுதிகளில் அதிக வெப்பநிலையை ஏற்படுத்தின. 40 ஆண்டுகள் காணாத உச்ச வெப்பநிலை மே 13ஆம் தேதி அங் மோ கியோவில் உணரப்பட்டது.
அன்று வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸைத் தொட்டது. முன்னதாக 1983ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில்தான வெப்பநிலை அவ்வளவு அதிகமாகப் பதிவானதென தேசிய சுற்றுப்புற அமைப்பு குறிப்பிட்டது. அவ்வப்போது பெய்து வரும் லேசான மழை கடும் வெயிலில் பணிபுரிவோருக்கு வெப்பத்திலிருந்து தற்காலிக ஓய்வு வழங்குகிறது.
சாங்கி விமான நிலையத்தில் பணிபுரிந்துவரும் திரு முரளிதரன் லட்சுமணன், 48, “நாங்கள் விமான ஓடு பாதையில் வேலை பார்க்கும்போது வெயிலையும் தாண்டி விமானங்கள் கிளம்புவதும் இறங்குவதுமே அதிக வெப்பத்தை ஏற்படுத்தும். அத்தகைய சூழலில் வேலை பார்ப்பதே சிரமமாக இருக்கும். கடந்த சில வாரங்களாக வாட்டி வரும் வெயிலின் காரணத்தால் கூடுதல் சவாலாக உள்ளது. பலர் சோர்வடைந்து மயக்கமாக உணர்வதாகவும் அவர்களுக்கு அடிக்கடி தலைவலி வருவதாகவும் கூறியுள்ளனர். வேலையிடத்தில் மேலாளர்கள் நீர் அருந்த கூடுதல் இடைவெளிகளை வழங்குவது உதவுகிறது,” என்று பகிர்ந்துகொண்டார்.
சாலை அமைப்புப் பணிகளில் ஈடுபடும் 36 வயது மாரிமுத்து குமரன், சுட்டெரிக்கும் வெயில் கொண்டு வந்த சவால்களை பகிர்ந்துகொண்டார்.
“சுட்டெரிக்கும் வெயிலில் வேலை பார்ப்பது புதிதல்ல. இளைப்பாற நிழல் இல்லாத சாலையில் நான் வேலை செய்திருக்கிறேன். இருப்பினும், கடந்த சில நாள்களாக வாட்டிய வெப்ப அலை அதிக சோர்வை ஏற்படுத்தியுள்ளது. என்னுடன் வேலை செய்யும் ஓர் இளம் ஊழியருக்கு வெயிலில் நீண்ட நேரம் வேலை செய்ததால் தோலில் சில பிரச்சினைகள் தோன்றியது. பணிகளை முடிப்பதுகூட சிரமமாக இல்லை. வெயிலைத் தாங்குவதுதான் பெரும் சவாலாக உள்ளது,” என்றார் திரு மாரிமுத்து.
‘ஏ&பி ஸ்கஃபோல்ட் எஞ்சினியரிங்’ நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான மாயா பாலசுப்ரமணியம், “கடும் வெயில் காலம் ஊழியர்களின் பணி நேரத்தை கடினமாக்குகிறது என்பதை அறிந்து கொண்டவுடன், ஒவ்வொரு மூன்று மணி நேரத்திற்கும் ஊழியர்கள் தண்ணீர் அருந்துவதை கட்டாயமாக்கினோம். அதோடு, வெயில் ஏற்படுத்திய சோர்வைப் புரிந்துகொண்ட ஊழியர்கள் தேவையான அளவு இடைவெளிகள் பெறுவதையும் உறுதிசெய்தோம். செயல்திறன் குறைந்தாலும் எங்களுக்காகப் பணிபுரிவோரின் பாதுகாப்பே முக்கியம் என்பதால் இந்நடவடிக்கைகளை எடுத்தோம்,” என்று குறிப்பிட்டார்.
இத்தகைய வெப்ப அலைகள், பருவநிலை மாற்றத்தின் பலமான தாக்கங்களை உணர்த்தியுள்ளன.
சபிதா ஜெயகுமார்