‘அன்னபூரணி’ படத்தில் நடிப்பதற்காக சமையல் நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டு நடித்தார் நயன்தாரா.
‘ராஜா ராணி’ படத்திற்குப் பிறகு நயன்தாரா, ஜெய், சத்யராஜ் ஆகிய மூன்று பேரும் இதில் மீண்டும் இணைந்துள்ளனர். கே.எஸ்.ரவிக்குமார், ரெடின் கிங்ஸ்லி, சுரேஷ் சக்கரவர்த்தி, சச்சு, கார்த்திக் குமார் உட்பட பலர் நடிக்கின்றனர்.
இந்தப் படத்தில் நயன்தாரா சாதாரண குடும்பத்தில் பிறந்து புகழ்பெற்ற சமையல் கலைஞராக எப்படி மாறுகிறார்? அவர் சந்தித்த பிரச்சினைகள் என்ன? என்பதுதான் படத்தின் கதை.
படம் பற்றி படக்குழுவினர் கூறுகையில், “சமையல்காரரின் சரியான குணாதிசயங்களையும் பல நுணுக்கங்களையும் சரியாகக் கற்றுக் கொண்டார் நயன்தாரா. தனக்குப் பதில் வேறு யாரையும் போடாமல் தானே அனைத்துக் காட்சிகளிலும் நடித்தார்.
“தன்னுடைய மதிய உணவு மற்றும் இரவு உணவு இடைவேளையில்கூட கேரவனுக்குள் செல்லாமல் அரங்கிலேயே இருந்தார். நயன்தாராவின் இந்த அர்ப்பணிப்பு ‘அன்னபூரணி’ படப்பிடிப்புத் தளத்தில் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.
“சில நாள்களில் பத்து மணிக்கு முடிந்துவிட வேண்டிய படப்பிடிப்பு நள்ளிரவு 12 மணி வரைகூட நீடித்தது. அவரது தனிப்பட்ட வேலைகள் காரணமாக படப்பிடிப்பை அடுத்த நாள் தொடரலாம் என்று படக்குழுவினர் தெரிவித்தபோதும் தன்னுடைய வேலைகளைக் கூட பொருட்படுத்தாது படத்திற்காக அதிகாலை 5 மணி வரை கூட அவர் இருந்து நடித்துக்கொடுத்தார்,” என்று படப்பிடிப்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
அண்மையில் நயன்தாரா, படப்பிடிப்பின்போது நேரக் கட்டுப்பாடு விதித்து தன்னுடைய காட்சிகளை முடித்துவிட்டு வீட்டிற்கு திரும்பி விடுகிறார். இயக்குநர்கள் மீண்டும் சில காட்சிகளை எடுக்கவேண்டும் என்று சொல்லும்போது நேரமாகிவிட்டது என்று சொல்லிவிடுவார் என்ற குற்றச்சாட்டு இருந்தது. ஆனால் தற்பொழுது நான் அப்படி இல்லை என்பதை நடைமுறையில் நிரூபித்துக் காட்டி இருக்கிறார் நயன்தாரா என்கிறது கோலிவுட்.