ஹொக்காய்டோ: ஒரு கிலோமீட்டர் தூரத்துக்குக் கடற்கரை எங்கும் டன் கணக்கில் இறந்த மீன்கள். அதுவும், ஆயிரக்கணக்கில்.
ஜப்பானின் ஹொக்காய்டோவில் இவ்வாறு ஆயிரக்கணக்கான ‘சார்டின்’ எனப்படும் மத்தி மீன்களும் கானாங்கெளுத்தி மீன்களும் கரை ஒதுங்கிய சம்பவம் உள்ளூர் மீனவர்களைப் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஹொக்கோடேட்டில் உள்ள டொய் மீன்பிடித் துறைமுகம் அருகே கரைமீது மீன்கள் டிசம்பர் 7ஆம் தேதியன்று காலைவேளையில் காணப்பட்டன.
திடீரென்று மீன்களுக்குச் சுவாச வாயு போதாமல் போயிருக்கலாம் என்ற ஊகம் எழுந்துள்ளது.
இவ்வாறு நடந்ததற்குக் காரணம் என்ன, மீன்களை எவ்வாறு அகற்றுவது என மாநில அரசாங்கம் விசாரணை மேற்கொண்டு வருகிறது.
குறைந்தது 1,000 டன்கள் இவ்வாறு கரை ஒதுங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.
மணலால் மூடப்பட்ட அந்த மீன்களைச் சாப்பிடக்கூடாது என்று எச்சரிக்கையும் மக்களுக்கு விடுக்கப்பட்டது.
இதற்கிடையே, குளிர்ந்த பகுதிக்குள் வந்ததனால் மீன்கள் இவ்வாறு பெரும் எண்ணிக்கையில் இறந்திருக்கலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.