ஜோகூர்: பிரதமர் அன்வார் இப்ராகிம் தன்னை நிரூபிப்பதற்காக வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று மலேசியர்களை ஜோகூர் சுல்தான் இப்ராகிம் வலியுறுத்தியுள்ளார்.
அன்வார் ஒரு வருடத்தில் மாற்றங்களைச் செய்வது சாத்தியமல்ல என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சுக்கு அளித்த சிறப்பு பேட்டியில் அவர் தெரிவித்தார்.
“ஒரே ஆண்டில் நாட்டை மாற்ற முடியும் என்று நான் நினைக்கவில்லை. (போக்குவரத்து அமைச்சர்) ஆண்டனி லோக் போன்ற நல்ல அமைச்சர்கள் அமைச்சரவையில் இடம்பெற்று உள்ளனர்,
“நான் அரசாங்கத்தை ஆதரிப்பேன். ஆனால் தவறு செய்தால் அது பற்றி அவர்களிடம் தெரிவிப்பேன்,” என்று சிங்கப்பூர் ஆங்கில நாளிதழிடம் அவர் தெரிவித்தார்.
பிரதமருடன் நெருக்கமாக இருப்பதால் அன்வாருடன் சேர்ந்து செயல்படுவதில் பிரச்சினை எதையும் எதிர்நோக்கவில்லை என்றார் அவர்.
ஆலோசனை பெறுவதற்காக நள்ளிரவில்கூட அன்வார் தன்னை அழைத்துப் பேசியுள்ளதாகவும் அவர் கூறினார்.
மாமன்னராக பொறுப்பு ஏற்றதும் ஊழலை துடைத்தொழிக்கப் போவதாகவும் சுல்தான் இப்ராகிம் அறிவித்துள்ளார்.
“நிலையான அரசாங்கம் தொடர்ந்து நீடிக்க வேண்டும், பொருளியலை சீர்ப்படுத்துவதற்கான நிலையான கொள்கைகள் வகுக்கப்பட வேண்டும்,” என்று ஜோகூர் சுல்தான் கூறியுள்ளார்.
சென்ற அக்டோபர் 27ஆம் தேதி 17வது மாமன்னராக சுல்தான் இப்ராகிமும் துணை மாமன்னராக பேராக் சுல்தான் நஸ்ரின் முய்ஸுடின் ஷாவும் அறிவிக்கப்பட்டனர்.
சுல்தான் இப்ராகிமின் ஐந்து ஆண்டுகால மாமன்னர் பொறுப்பு அடுத்த ஆண்டு ஜனவரி 31ஆம் தேதி தொடங்குகிறது. அதே நாளில் சுல்தான் நஸ்ரினும் பொறுப்பு ஏற்கிறார்.
16வது மான்னரான பாகாங் சுல்தான் அப்துல்லாவுக்குப் பதிலாக புதிய மன்னராக ஜோகூர் சுல்தான் இப்ராகிம் பொறுப்பு ஏற்கவிருக்கிறார்.
தற்போதைய மாமன்னரான அப்துல்லா, 2019 ஜனவரி 31ஆம் தேதியிலிருந்து பதவி வகித்து வருகிறார்.