துவாஸ் துறைமுகப் பெருந்திட்டத்திற்குத் தேவையான நிலமீட்புக்கு செமக்காவ் நிலப்பரப்பின் சாம்பல் பயன்படுத்தப்படலாம்.
செமக்காவ் தீவுதான் சிங்கப்பூரின் குப்பையைக் கொட்டும் ஒரே கிடங்காக இருக்கிறது. அங்கு கழிவுகள் எரிக்கப்படுவதால் எஞ்சக்கூடிய சாம்பலை இதர நோக்கத்திற்குப் பயன்படுத்தலாமா என்பது பற்றிய ஆய்வு நடந்து வருகிறது.
துவாஸ் துறைமுகப் பெருந்திட்டத்தின் மூன்றாம் கட்ட நிலமீட்புக்கு பத்தில் ஒரு பகுதி, செமக்காவ் நிலப்பரப்பில் இருந்து எடுக்கப்படலாம். இதன்மூலம் செமக்காவில் குவியும் குப்பையின் பெரும் பகுதி காலி செய்யப்படும்.
அந்த நிலப்பரப்பில் உள்ள சாம்பல் கழிவுகளை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கும் அதற்கு மேற்பட்ட காலத்திற்கும் பயன்படுத்த தேசிய சுற்றுப்புற அமைப்பு திட்டமிடுவதாகவும் அதனுடன் சிமெண்டைக் கலந்து நிலமீட்புக்கான மணலுக்கு மாற்றுப் பொருளாக்கும் சாத்தியம் இருப்பதாகவும் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் அறிகிறது.
செமக்காவ் நிலப்பரப்பில் தற்போது குவிந்துள்ள குப்பைக் கழிவுகளில் ஏறக்குறைய 10 மில்லியன் கனமீட்டர் அளவுக்குத் தோண்டி எடுப்பது திட்டம். இது தற்போதைய 28 மில்லியன் கன மீட்டர் கழிவின் கிட்டத்தட்ட 35 விழுக்காடு ஆகும்.
துவாஸ் துறைமுக மூன்றாம் கட்டத்துக்கான நிலமீட்பிற்கு 100 மில்லியன் கனமீட்டருக்கும் மேற்பட்ட பகுதியை நிரப்பவேண்டிய அவசியம் உள்ளது.
கலப்புப்பொருள்களை நிலமீட்புக்குப் பயன்படுத்துவது தொடர்பான ஆய்வை சிங்கப்பூர் கடல்துறை மற்றும் துறைமுக ஆணையத்துடன் இணைந்து நடத்தி வருவதாக தேசிய சுற்றுப்புற அமைச்சு ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸிடம் தெரிவித்தது.
நிலப்பரப்பை நிரப்ப, எரியூட்டப்பட்ட பொருள்களின் அடிசாம்பலுடன் கழிவுநீரைச் சேர்ப்பதே கலப்புப் பொருள் எனப் பொருள்படும்.
“நிலமீட்பை நிரப்ப இந்த கலப்புப் பொருளைப் பயன்படுத்தினால் வழக்கமாகத் தேவைப்படும் மணல் போன்ற பொருள்களுக்கான தேவை குறையும். அத்துடன் செமக்காவ் குப்பையும் பெருமளவு குறையும்,” என்றது அமைப்பு.
தற்போதைய குப்பை நிரப்பும் விகிதத்தைக் கணக்கிட்டால் 2035ஆம் ஆண்டுவாக்கில் செமக்காவ் நிரம்பிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.