பேரங்காடி நிறுவனமான ஷெங் சியோங், 2024ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் அதன் பொருள்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு 1% கழிவு வழங்கவுள்ளதாக அறிவித்தது.
அதிகரிக்கும் விலையால் வாடிக்கையாளர்களுக்கு ஏற்படும் தாக்கத்தைக் குறைக்க இந்தச் சலுகை வழங்கப்படுவதாக நிறுவனம் டிசம்பர் 15ஆம் தேதியன்று தெரிவித்தது.
இருப்பினும், குழந்தைகளுக்கான பால்மாவு, புகையிலை, மதுபானம், மருத்துவப் பொருள்கள் மற்றும் கருவிகள், தொலைபேசி அட்டைகள், ஷெங் சியோங் பற்றுச்சீட்டுகள் ஆகியவற்றுக்கு இந்தக் கழிவு வழங்கப்படாது.
மேலும், நெகிழிப் பைகளுக்கான கட்டணத்துக்கும் இந்தக் கழிவு இல்லை என்று குறிப்பிடப்பட்டது.
எதிர்வரும் புதிய ஆண்டில் ஜனவரி 1ஆம் தேதி முதல், பொருள் சேவை வரி (ஜிஎஸ்டி), 8 விழுக்காட்டிலிருந்து 9 விழுக்காடாக உயரவுள்ளது.
மூத்த குடிமக்களுக்காக செவ்வாய்க்கிழமைகளிலும் புதன்கிழமைகளிலும் ஷெங் சியோங் வழங்கும் 4% கழிவுத் திட்டம் அடுத்த ஆண்டு இறுதி வரை நீட்டிக்கப்படுவதாகவும் நிறுவனம் அறிவித்தது.
இச்சலுகை 2015ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்படி, 60 வயதும் அதற்கு மேற்பட்ட வயதும் உடைய சிங்கப்பூரர்களும் நிரந்தரவாசிகளும் வாங்கும் பொருள்களுக்கு 4% கழிவைப் பெறலாம்.
இந்தச் சலுகைத் திட்டத்தால் முதியோரால் 2023ல் சுமார் $4 மில்லியனை மிச்சப்படுத்த முடியும் என்று எதிர்பார்க்கப்படுவதாக ஷெங் சியோங் தெரிவித்தது.