எம்பிவி எனப்படும் பல பயன்பாட்டு வாகனங்கள் துவாஸ் சோதனைச் சாவடியில் கார்கள் செல்லும் தடத்துக்குப் பதிலாக பேருந்து தடத்திலேயே செல்ல அனுமதிக்கப்பட்டு உள்ளன.
அந்த வாகனங்களில் பயணம் செய்யும் பயணிகள் குடிநுழைவுச் சோதனையை முடித்த பின்னர் அதே வாகனத்திற்குத் திரும்புவதற்கு வசதியாக இந்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
வழக்கமாக சோதனைச் சாவடியைக் கடந்து செல்லும் இதர பேருந்துகளுக்கு வழங்கப்படும் அதே அனுமதி எம்பிவிக்களுக்கும் இப்போது வழங்கப்படுகிறது.
எம்பிவி என்பது ஹுண்டாய் ஸ்டாரியா, டொயோட்டா வெல்ஃபைர், டொயோட்டா ஆல்ஃபர்ட் மெக்சஸ் போன்ற பெரிய கார்களைக் குறிக்கும்.
இந்த வகை வாகனங்களில் அறுவருக்கும் மேற்பட்டோர் அமரலாம்.
இது தொடர்பான செய்தி சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இடையே பயணம் செய்வோரின் ஃபேஸ்புக் குழுக்களில் செவ்வாய்க்கிழமை (ஜனவரி 2) பரவியது.
அதனை சிங்கப்பூர் குடிநுழைவு சோதனைச் சாவடி ஆணையம் தனது ஃபேஸ்புக் பதிவில் உறுதிப்படுத்தி உள்ளது.
சோதனை அடிப்படையில் பல நோக்கு வாகனங்கள் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக அது தெரிவித்தது.
அதேநேரம் சிறிய எம்பிவி கார்கள், கார் தடத்திலேயே தொடர்ந்து செல்லலாம் என்றும் ஆணையம் தனது ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளது. இருப்பினும், அந்த கார்களுக்கான மாதிரிகளை அது குறிப்பிடவில்லை.
சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இடையிலான எல்லைப் போக்குவரத்து உலகின் ஆக சுறுசுறுப்பான வழித்தடம். இந்த வழித்தடத்தை 2023 டிசம்பர் 15 முதல் டிசம்பர் 17 வரையிலான மூன்று நாள்களில் மட்டும் தினமும் சராசரியாக 435,000 வாகனங்கள் கடந்து சென்றதாக ஆணையம் கூறியது.
2019ஆம் ஆண்டின் அதே காலகட்டத்தில் பதிவான எண்ணிக்கையைக் காட்டிலும் இது 30,000 அதிகம்.