தேசிய சேவைக்குக் காத்திருப்போரும் தேசிய சேவையாளர்களும் 2025ஆம் ஆண்டு முதல் புதிய மத்திய ஆள்பலத் தளத்தின் (சிஎம்பிபி) மூலம் அனைத்துச் சேவைகளையும் ஒரே இடத்தில் பெற முடியும்.
கட்டங்கட்டமாகத் திறக்கப்படவுள்ள இந்தச் சேவை மையத்தில் தேசிய சேவை தொடர்பான அனைத்து நிர்வாகச் சேவைகளையும் நாடலாம்.
அதேவேளை, தேசிய சேவை தொடர்பான சேவைகளையும் பரிவர்த்தனைகளையும் ஒருங்கிணைக்கும் ‘ஒன்என்எஸ்’ கைப்பேசிச் செயலி, இவ்வாண்டு அனைத்து தேசிய சேவைப் பிரிவுகளுக்கும் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
இதனால், தேசிய சேவையாளர்கள் தங்களின் அடையாள அட்டையை எடுத்து வருடத் தேவையில்லை. அவர்களின் வருகையைச் செயலி பதிவுசெய்திடும்.
தற்போதைய தேசிய சேவை இணையவாசலுக்குப் பதிலாக புதிய இணையத்தளம் ஒன்று பயன்பாட்டுக்கு வரும். குறைந்த தடங்கலுடன் எளிதில் தேசிய சேவை தொடர்பான சேவைகளை நாட இது ஏதுவாக இருக்கும்.
தேசிய சேவை அனுபவத்தையும் நிர்வாகச் செயல்திறத்தையும் இப்புதிய நடைமுறைகள் மேம்படுத்தும் என்று பிப்ரவரி 29ஆம் தேதியன்று தற்காப்பு அமைச்சின் வரவுசெலவுத் திட்ட விவாதத்தின்போது தற்காப்பு மூத்த துணை அமைச்சர் ஹெங் சீ ஹாவ் தெரிவித்தார்.
முன்னதாக 2019ல் அறிவித்ததன்படி புதிய சிஎம்பிபி கட்டடம் கேஷ்யூ எம்ஆர்டி நிலையத்திற்கு எதிரே அமைந்திருக்கும்.
தேசிய சேவைக்குக் காத்திருப்போருக்கான மருத்துவப் பரிசோதனை நேரத்தைப் புதிய ஒருங்கிணைந்த மையம் குறைக்க உதவும். மேலும், அதே இடத்தில் அவர்கள் தங்களின் தனிநபர் உடலுறுதிச் சோதனையையும் மேற்கொள்ளலாம் என்றார் திரு ஹெங்.
சிங்கப்பூர் ஆயுதப் படையின் இரண்டாவது வட்டாரச் சுகாதார மையமும் (ஆர்எச்எச்) புதிய சிஎம்பிபி வளாகத்தில் அமைந்திருக்கும்.
இதனால், ராணுவ வீரர்களுக்கான பராமரிப்புச் சேவை துரிதமாக வழங்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.
அடுத்த பத்தாண்டு காலத்தில் மேலும் நான்கு ஆர்எச்ஆச் நிறுவப்படும் என்று திரு ஹெங் தெரிவித்தார்.
அவ்வகையில், காத்திப் வட்டாரத்தில் 2027ல் செயல்படத் தொடங்கவுள்ள மூன்றாவது ஆர்எச்எச், சிங்கப்பூர் ஆயுதப் படையின் முதல் விளையாட்டுகள், உடற்பயிற்சி மருத்துவ நிலையத்தைக் கொண்டிருக்கும்.
தேசிய சேவை தொடர்பான பொருள்களை வாங்கப் புதிய சிஎம்பிபியில் கடை ஒன்றும் இருக்கும்.
புதிய ஒருங்கிணைந்த மையத்தில் 700 பேர் அமர்ந்து சாப்பிடக்கூடிய உணவு நிலையம், குழந்தைப் பராமரிப்பு நிலையம், காற்பந்துத் திடல், உடலுறுதி வளாகம் போன்ற வசதிகளைப் பொதுமக்களும் பயன்படுத்த முடியும்.
மரினா பே மிதக்கும் மேடை உள்ள தளத்தில் தற்போது என்எஸ் சதுக்கத்திற்கான பணிகளில் உள்ள முன்னேற்றம் குறித்தும் திரு ஹெங் பேசினார்.
2024ஆம் ஆண்டு மார்ச் மாதம் அதற்கான கட்டுமானப் பணிகள் தொடங்கும் என்றும் 2027ஆம் ஆண்டில் முடிவடைந்திடும் என்றும் அவர் கூறினார். தேசிய தின அணிவகுப்பு மற்றும் பெரிதளவிலான சமூக, விளையாட்டு, பொழுதுபோக்கு நடவடிக்கைகளுக்கு அது பயன்படுத்தப்படும் என்று அவர் தெரிவித்தார்.