ஜகார்த்தா: இந்தோனீசியாவில் அதிபர் பதவியை ஏற்கப்போவதாக நம்பப்படும் திரு பிரபோவோ சுபியாந்தோ 2024ன் பிற்பாதியில் மிக சுமுகமான ஆட்சி மாற்றம் இடம்பெறும் என்று உறுதி அளித்துள்ளார்.
முதலீட்டுக் கருத்தரங்கு ஒன்றில் பேசிய திரு பிரபோவோ, அடுத்த நான்கு அல்லது ஐந்து ஆண்டுகளுக்குள் பொருளியல் வளர்ச்சி ஆண்டுதோறும் 8 விழுக்காட்டை எட்டக்கூடும் என்று தாம் நம்புவதாகவும் கூறினார்.
பிப்ரவரி 14ஆம் தேதி நடைபெற்ற அதிபர் தேர்தலில் திரு பிரபோவோ பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றிருப்பதாக அதிகாரபூர்வமற்ற வாக்கு எண்ணிக்கை காட்டுகிறது.
இந்தோனீசியாவில் அரசாங்கம் சில உத்திபூர்வ இடங்களில் தொடர்ந்து கட்டுப்பாடுகளை விதித்து முடிவுகளை எடுத்துவந்தாலும், தனியார் துறை செழித்தோங்கி முன்னின்று வழிநடத்தவேண்டும் என்றார் அவர்.
வங்கித் துறை, தொலைத்தொடர்பு, கட்டுமானம் போன்ற துறைகளில் உள்ள அரசாங்க நிறுவனங்கள் இந்தோனீசியாவின் பொருளியலில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
இந்நிலையில், திரு பிரபோவோ, 72, தற்போதைய அதிபர் ஜோக்கோ விடோடோவின் கொள்கைகளைத் தொடரப்போவதாக உறுதி அளித்திருக்கிறார். வரி விகிதாச்சாரத்தைக் கணிசமான அளவு மேம்படுத்த நோக்கம் கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.