சிங்கப்பூரில் உள்ள மலேசியத் தூதரகம், மார்ச் 27ஆம் தேதி முதல், தூதரகச் சேவைகளுக்கு இணையம்வழி முன்பதிவு செய்யும் முறையைத் தொடங்கவிருக்கிறது.
தூதரகம் இதுகுறித்து மார்ச் 21ஆம் தேதி ஃபேஸ்புக்கில் பதிவிட்டது.
பிறப்பு, திருமணம், இறப்பு ஆகியவற்றுக்கான சான்றிதழ்களைப் பெறுவதற்கு இனி இணையம்வழி முன்பதிவு செய்வது அவசியம்.
குடியுரிமையைக் கைவிடுவோரும் நன்னடத்தைச் சான்றிதழ், ஆவணங்களுக்கு சான்றளிப்பு பெற விரும்புவோரும் அதேபோல் இணையத்தில் முன்பதிவு செய்ய வேண்டும்.
கடந்த பிப்ரவரி மாதத்தில், ஒரு நாளைக்கு 70 பேருக்கு மட்டுமே தூதரகச் சேவைகள் வழங்கப்படும் என்று சிங்கப்பூரிலுள்ள மலேசியத் தூதரகம் அறிவித்திருந்தது.
பிப்ரவரி 27ஆம் தேதி அது நடப்புக்கு வந்தது.
அந்த நடைமுறை குறித்து இங்கு வசிக்கும் மலேசியர்கள் பலரும் கவலை தெரிவித்த நிலையில் புதிய அறிவிப்பு வெளிவந்துள்ளது.
2022ஆம் ஆண்டு நிலவரப்படி சிங்கப்பூரில் 1.13 மில்லியன் மலேசியர்கள் வசிப்பதாக அந்நாட்டின் அப்போதைய மனிதவள அமைச்சர் வி.சிவகுமார் 2023ல் தெரிவித்திருந்தார்.