தூத்துக்குடி: தூத்துக்குடியில் காரசாரமான விவாதங்களுக்குப் பிறகு கனிமொழியின் வேட்பு மனு ஏற்கப்பட்டது.
தூத்துக்குடி மக்களவைத் தேர்தல் வேட்புமனுத் தாக்கல் கடந்த 20ஆம் தேதி முதல் புதன்கிழமை (மார்ச் 27) வரை நடந்தது.
53 வேட்பு மனுக்களை பல்வேறு கட்சிகளின் வேட்பாளர்கள் தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுக்கள் மீதான பரிசீலனை வியாழக்கிழமை (மார்ச் 28) காலை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் லட்சுமிபதி தலைமையில் நடந்தது.
பொதுத் தேர்தல் பார்வையாளர் திவேஷ் ஷெஹரா முன்னிலை வகித்தார்.
அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணி மனு மீதான விசாரணையின் போது, வேட்புமனுவில் படிப்பை தவறாக தெரிவித்து இருப்பதாக திமுகவினர் புகார் தெரிவித்தனர்.
ஆனால், மனுவை நிராகரிப்பதற்கு படிப்பை காரணமாக ஏற்கமுடியாது என்று கூறி அவரது வேட்பு மனுவை தேர்தல் நடத்தும் அலுவலர் ஏற்றுக்கொண்டார்.
அதன்பிறகு திமுக வேட்பாளர் கனிமொழி மனு மீதான விசாரணை நடந்தது.
அப்போது, 2ஜி வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் மீண்டும் நடக்க இருப்பதால், அவரது மனுவை நிராகரிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு புகார்களை அதிமுகவினர் தெரிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து, இருதரப்பினரும் காரசாரமான விவாதங்களை முன்வைத்தனர்.
இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் கனிமொழி மனுவை தேர்தல் நடத்தும் அலுவலர் லட்சுமிபதி ஏற்றுக்கொண்டார்.