இட்டார்சி: ரயில் பயணத்தின் போது சக பயணியின் தண்ணீரை குடித்ததற்காக ஏற்பட்ட வாக்கு வாதத்தில் வாலிபர் ஒருவர் ரயில் சன்னலில் கட்டிவைத்து மூவரால் அடித்து தாக்கப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. மும்பையில் வேலை பார்க்கும் மத்திய பிரதேசத்தை சேர்ந்த சுமித் என்ற இளையர், வேலை முடிந்து தனது ஊருக்குத் திரும்ப ஜபல்பூரில் இரவு 11 மணி அளவில் ரயில் ஏறினார். ரயில் பயணத்தின்போது, அருகில் இருந்த மூன்று இளையர்கள் வைத்திருந்த நீரை எடுத்து இரண்டு மடக்குதான் குடித்தார்.
அவரது செயலைக் கண்டு வெறுப்படைந்த இளையர்கள் அவரை ஏசியதுடன் அடித்துத் தாக்கத் தொடங்கினர். அதிலும் திருப்தி அடையாத இளையர்கள், அவசர அபாய சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தி, சுமித்தை ரயிலை விட்டு வெளியில் இழுத்து வந்து ரயிலின் சன்னலில் கட்டி வைத்தனர். இந்தச் சம்பவம் பற்றி தெரியாத ரயில் ஓட்டுநர், மீண்டும் ரயிலை ஓட்டத் தொடங்கினார். சுமித் ரயிலின் வெளிப்புறத்திலேயே தொங்கிக்கொண்டு இருந்தார். தொடர்ந்து 4 மணி நேரம் பயணித்த ரயில் முடிவாக இட்டார்சியில் நின்றது. மூன்று குற்றவாளிகளும் ரயிலை விட்டு வெளியில் வந்து தங்களது இடைவாரால் சுமித்தை அடித்துத் தாக்கினர். சுமித் அழுது ஓலமிட்டதைக் கண்டு அவர்களது மனம் துளியும் இறங்கவில்லை. அங்கு திரண்ட மக்கள் சுமித்தைக் காப்பாற்றினர்.
"தாகத்திற்காக தண்ணீர் குடித்ததற்கு இதுபோன்று ஒரு வரை கொடூரமான முறையில் தாக்குவது மனித தன்மையற்ற செயல்," என்று நாடெங்கும் கண் டனம் வலுத்து வருகிறது. பாட்னா வைச் சேர்ந்த இளையர்கள் மூவ ரிடமும் விசாரணை தொடர்கிறது.
இரண்டு வாய் தண்ணீர் குடித்ததற்காக மூன்று இளையர்களால் ரயிலில் கட்டி வைத்து இடைவாரால் ஈவு இரக்கமற்று அடித்துத் தாக்கப்பட்ட சுமித். படம்: ஊடகம்