பாகிஸ்தானில் பெய்த கனமழையத் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் பல வீடுகளும் கடைகளும் சேதம் அடைந்ததைத் தொடர்ந்து கடைக்காரர்கள் தங்கள் பொருட்களை எடுத்துச் செல்ல முயலுகின்றனர். அங்கு கடந்த 2 நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக பல இடங்களில் திடீர் வெள்ளப்பெருக்கும் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளன. இந்தப் பேரிடரில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 55 ஆக உயர்ந்துள்ளதாகவும் நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்திருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பாகிஸ்தானின் பெரும்பாலான பகுதிகளில் ஜூலை மத்தியில் இருந்து ஆகஸ்ட் வரை பருவ மழை பெய்வது வழக்கம். ஏப்ரல், மே மாதங்களில் கோடை மழையும் பெய்யும். அந்த வகையில் கைபர் பக்துன்கவா, கில்ஜித்-பலுசிஸ்தான், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் கடந்த சனிக்கிழமை இரவு முதல் பலத்த கோடை மழை பெய்து வருகிறது. இதனால் அந்தப் பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. முக்கிய சாலைகள் துண்டிக்கப்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. கோடிக்கணக்கில் பொருட்சேதம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். படம்: ஏஎஃப்பி