ருபனேஸ்வரன் ஞானசுப்ரமணியம்
சிங்கப்பூரில் இளையர்கள் எதிர்நோக்கி வரும் சவால்களையும் விடாமுயற்சி பண்பையும் மையமாகக் கொண்டு "டஸ்க் டில் டான்" எனும் இசைக் காணொளியைத் தயாரித்துள்ளனர் ஜூரோங் வெஸ்ட் உயர்நிலைப் பள்ளி யைச் சேர்ந்த தமிழ் மாணவர்கள். தெமாசெக் 20/20 போட்டியில் பங்கேற்ற நான்கு உயர்நிலைப் பள்ளி குழுக்களில் இவர்களது குழுவும் அடங்கும். உள்ளூர் மேடை நாடக மற்றும் திரைப்பட இயக்குநரான சலீம் ஹாடியின் மூலம் இந்த வாய்ப்பைப் பற்றி அறிந்தார் ஜூரோங் வெஸ்ட் உயர்நிலைப் பள்ளியின் தமிழ் ஆசிரியரான திருமதி லட்சுமி.
இதற்கு முன்பு அவருடன் சில பள்ளி ரீதியான கூட்டுமுயற்சிகளில் ஈடுபட்டிருந்த திருமதி லட்சுமி, இந்தப் போட்டியைத் தனது தமிழ் மாணவர் களிடம் அறிமுகப்படுத்தி அவர்களை அப்போட்டியில் பங்கேற்க ஊக்குவித்தார். "ஆரம்பத்தில் எங்களுக்குத் திரைப் படத் தயாரிப்பில் அதிக ஆர்வம் இருக்கவில்லை. ஆனால் ஆசிரியர் எங்கள் மீது வைத்திருந்த நம்பிக்கையும் அவர் கொடுத்த ஆதரவும் எங்களை இப்போட்டியில் பங்குப்பெறத் தூண்டியது. "இப்போட்டியின் வழி தொழில்நுட்பத் திறன்களை வளர்த்துக்கொண்டு எங்களது சமூக நட்பு வட்டத்தையும் அதிகரிக்கலாம் என்று எண்ணினோம்," எனக் கூறியிருந்தார் இந்த இசைக் காணொளி முயற்சியில் தயாரிப்பாளராகப் பங்காற்றிய பொன் அனுஷா, 15. "சிங்கப்பூரில் நமக்கு எதுவும் எளிதாக கிடைப்பதில்லை. விடாமுயற்சி யுடன் கடின உழைப்பும் இருந்தால்தான் நம்மால் இங்கு நாம் விரும்பியவற்றை அடைய முடிகிறது.
"இக்கருத்தைத்தான் என்னுடைய மாணவர்கள் இந்த இசைக் காணொளியில் இடம்பெறும் கதாமாந் தரின் வாழ்க்கைப் பயணத்தின் வாயி லாக எடுத்துக்காட்ட முயற்சி செய்து உள்ளனர்," என்று தெரிவித்தார் அம்மாணவர்களின் தமிழ் ஆசிரியரான திருமதி லட்சுமி. இந்த மாணவர்களின் இப்பயணத் தின் முதல்கட்ட வேலையாக கைபேசி யைப் பயன்படுத்தி காணொளி தயாரிக் கும் முறையை அவர்கள் கற்றுக்கொள்ள வேண்டியிருந்தது. இதற்காக அம்மாண வர்கள் தெமாசெக் நிறுவனத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட சில சிறப்புப் பயிலரங்குகளில் பங்கேற்றனர். 'சூப்பர் 4' எனும் குழுப்பெயரோடு இம்முயற்சியில் ஈடுபட்ட பொன் அனுஷா, ரொசெனா முஹமது ஹனிஃப், ஷாமினி மற்றும் சூர்யா ரவிச் சந்திரனுக்குச் சில சவால்கள் எழுந்தன.
"பயிலரங்கிற்குச் சென்ற பிறகும் கைபேசியைப் பயன்படுத்தி படப்பிடிப்பில் ஈடுபடுவது சற்று கடினமாகவே இருந்தது. அதுமட்டுமில்லாமல், படப்பிடிப்பு முடிந்து 'பிரிமியர் ப்ரோ' படத்தொகுப்பு மென் பொருளின்வழி இசைக் காணொளியின் இறுதிக்கட்ட வேலைகளில் ஈடுபட்டதும் ஒரு சவாலாக இருந்தது," என்றார் பொன் அனுஷா. இருப்பினும், மனந்தளராமல் தமிழ் ஆசிரியரின் ஆதரவோடு தொடர்ந்து கடினமாக உழைத்தார்கள் 'சூப்பர் 4' குழுவினர்.
அத்துடன், புதிதாக திரைப்படத் தயாரிப்பில் (film making) களமிறங்கிய இம்மாணவர்களுக்குப் பக்கபலமாய் இருந்து அவர்களது ஒவ்வொரு கட்ட வேலையையும் தொடர்ந்து வழிகாட்டியவர் அனுபவமிக்க உள்ளூர் திரைப்பட இயக்குநரான வீ லி லின். "தெமாசெக் நிறுவனம் லி லின்னை எங்களது குழு ஆலோசகராக நியமித்தது. நடிகர்களிலிருந்து படப் பிடிப்புக் குழுவினர் வரை எங்களுடைய முயற்சியில் பற்பல வழிகளில் துணை புரிந்தவர் அவர்தான். லி லின் எங்களது திட்டங்களை உள்வாங்குவதோடு தக்க சமயங்களில் ஆலோசனைகளை கூறியும் எங்களைச் சரியான பாதையில் கொண்டு சென்றார்," என்றார் பொன் அனுஷா. பொன் அனுஷாவும் அவரது மற்ற மூன்று குழுவினருக்கும் இந்தப் போட்டி ஒரு நல்ல கற்றல் அனுபவமாக அமைந்தது.
"இதற்கு முன்னர் நான் இம்மாதிரியான வேலைகளில் ஈடுபட்டதில்லை. ஆனால் இப்பயணத்தின் மூலம் நானும் என்னுடைய குழுவினரும் பல்வேறு புதிய திறன்களையும் அனுபவங்களையும் பெற்றுள்ளோம். "வாய்ப்புகள் கிடைத்தால் நாங்கள் இன்னும் திரைப்படத் தயாரிப்பு முயற்சிகளில் ஈடுபடுவோம்," என்று தமிழ் முரசிடம் பகிர்ந்துகொண்டார் பொன் அனுஷா.
பொன் அனுஷா, ஷாமினி, ரொசெனா முஹமது ஹனிஃப், சூர்யா ரவிச்சந்திரன்.