புதுடெல்லி: ஐக்கிய அரபுச் சிற்றரசுகளில் இம்மாதம் 15=28 தேதிகளில் நடக்கவிருக்கும் ஆசிய கிண்ண ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான 16 பேர் கொண்ட இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. அணித் தலைவரான விராத் கோஹ்லிக்கு இத்தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. ரோகித் சர்மா அணித் தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளார். புதுமுக வீரராக ராஜஸ்தானைச் சேர்ந்த 20 வயது இடது கை வேகப்பந்து வீச்சாளரான கலீல் அகமது இடம்பெற்றுள்ளார். மொத்தம் ஆறு அணிகள் இரு பிரிவுகளாக இத்தொடரில் மோதுகின்றன. 'ஏ' பிரிவில் இந்தியா, பாகிஸ்தானுடன் தகுதிச் சுற்றில் வெல்லும் அணி இடம்பெறும். இலங்கை, பங்ளாதேஷ், ஆப்கானிஸ்தான் ஆகிய மூன்று அணிகளும் 'பி' பிரிவில் இடம்பெற்றுள்ளன.
இந்தியா=பாகிஸ்தான் மோதும் ஆட்டம் இம்மாதம் 19ஆம் தேதி துபாயில் நடைபெறும். அணி விவரம்: ரோகித் சர்மா (அணித் தலைவர்), ஷிகர் தவான் (துணைத் தலைவர்), லோகேஷ் ராகுல், அம்பதி ராயுடு, மணீஷ் பாண்டே, கேதார் ஜாதவ், மகேந்திர சிங் டோனி, தினேஷ் கார்த்திக், ஹார்திக் பாண்டியா, குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சகல், அக்சர் பட்டேல், புவனேஸ்வர் குமார், ஜஸ்பிரீத் பும்ரா, ஷர்துல் தாக்குர், கலீல் அகமது.