யானைத் தந்தங்கள் மற்றும் அருகிவரும் விலங்கு பாகங்களால் செய்யப்பட்டுள்ள பல்வேறு பொருட்களை ஹாங்காங்கின் சுங்கத்துறை பறிமுதல் செய்தது. சட்டவிரோத விலங்குப் பொருள் கடத்தலை முறியடிக்க அதிகாரிகளின் முயற்சிகள் அதிகரித்துள்ள வேளையில் ஆப்பிரிக்காவிலிருந்து கடத்தப்பட்டுள்ள இப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இந்தப் பொருட்களின் மொத்த மதிப்பு 62 மில்லியன் ஹாங்காங் டாலருக்கும் ( 10.7 மில்லியன் வெள்ளி) அதிகம். நைஜீரியாவிலிருந்து இவை வியட்னாமுக்கு அனுப்பப்படவேண்டியிருந்ததாக அவர்கள் கூறினர். மற்றொரு சம்பவத்தில், வியட்னாமின் வடக்குப் பகுதியிலுள்ள ஹை போங் துறைமுகத்தில் சுங்கத்துறை அதிகாரிகள், மேலும் 1.4 டன் பங்கோலின் தோலைக் கண்டுபிடித்ததாக வியட்னாமிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.