சிங்கப்பூரின் தொலைக்காட்சி ஒளிவழி ஐந்துடன் 'ஒக்டோ' ஒளிவழி இணைக்கப்படும் என்று மீடியாகார்ப் ஊடக நிறுவனம் நேற்று தெரிவித்தது. சிறார்களுக்கான நிகழ்ச்சிகளும் விளையாட்டுப் போட்டிகளும் ஒளியேறும் உள்ளூர்த் தொலைக்காட்சி ஒளிவழியாக இதுவரை திகழ்ந்த 'ஒக்டோ', இனிமேல் தொலைக்காட்சிக் கட்டமைப்பில் தனி ஒளிவழியாக இடம்பெறாது.
தகவல், தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையத்திடம் இந்த ஒளிவழியின் அலைவரிசையை மீடியாகார்ப் ஒப்படைக்க உள்ளது. ஆயினும் 'ஒக்டோ'வின் சின்னம், மீடியாகார்ப்பின் 'டோகல்' கேளிக்கை தளத்தில் தொடர்ந்து பயன்படுத்தப்படும் என்று மீடியாகார்ப் கூறியது. இரண்டு ஒளிவழிகளின் சிறப்பு அம்சங்களின் சங்கமத்தின்மூலம் ஒளிவழி ஐந்து, சிங்கப்பூரின் ஆகச் சிறந்த, குடும்பங்களுக்கு ஏற்ற ஆங்கில மொழி ஒளிவழியாகத் திகழும் என்று மீடியாகார்ப் தெரிவித்தது.
"எங்களது பார்வையாளர்களின் தேவைகளை அறிந்து அதனை நிறைவேற்றுவதில் நாங்கள் கொண்டிருக்கும் கடப்பாட்டை இந்த மாற்றங்கள் பிரதிபலிக்கின்றன," என்று மீடியாகார்ப்பின் தலைமை வாடிக்கையாளர் அதிகாரி ஐரீன் லிம் தெரிவித்தார்.