ஹுவாவெய் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி மெங் வான்சோ கனடிய அரசாங்கத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளார்.
கனடிய அரசாங்கம் தன்னைத் தவறான முறையில் கைது செய்ததாகவும் தனது வீட்டைச் சோதனையிட்டதாகவும் மெங் தனது மனுத்தாக்கலில் குறிப்பிட்டுள்ளார். இதனால் தனது நற்பெயருக்கு ஏற்பட்டிருக்கும் களங்கத்திற்கான இழப்பீட்டையும் அவர் கோரியுள்ளார்.
வழக்கமான சுங்கச்சாவடி சோதனையில் ஈடுபட்டதுபோல் அதிகாரிகள் சிலர் தன்னிடம் வந்து சட்டவிரோதமாகத் தகவல்கள் பலவற்றைப் பெற்றுக்கொண்டதாக மெங்கின் மனுத்தாக்கலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஈரானுக்கு எதிரான வர்த்தகத் தடைகளை மீறும் பரிவர்த்தனைகளை ஹுவாவெய் நிறுவனத்திற்காக நிறைவேற்ற மெங், அமெரிக்க வங்கிகளிடம் பொய்யான தகவல்களை அளித்ததாக அமெரிக்கா அவரைக் குற்றம் சாட்டுகிறது. இதனை வன்மையாக மறுக்கும் சீனா, வீட்டுக்காவலில் இருக்கும் மெங்கின் விடுதலையைக் கோரி வருகிறது.