மலேசிய பிரதமர் மகாதீர் முகம்மதின் தலைமைத்துவத்தைத் தொடர்ந்து ஆதரிப்பதாக அந்நாட்டின் ஆளுங்கூட்டணியான பக்கத்தான் ஹரப்பான் தெரிவித்துள்ளது.
டாக்டர் மகாதீர் பாதிப்புகளை ஏற்படுத்திய முன்னாள் சர்வாதிகாரி என்று திரு அன்வார் இப்ராஹிம்மின் மகள் நூருல் இஸா அன்வார் 'ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்' நாளிதழிடம் தெரிவித்ததை அடுத்து பக்கத்தான் ஹரப்பான் இவ்வாறு கூறியுள்ளது. மக்களிடமிருந்து அரசாங்கம் திருடிய நிலையிலிருந்து நாட்டை மறுசீரமைக்க முற்படும் டாக்டர் மகாதீரைக் கூட்டணி ஆதரிப்பதாக பக்கத்தான் ஹரப்பான் தெரிவித்ததாக 'த ஸ்டார்' பத்திரிகை குறிப்பிட்டுள்ளது..
கூட்டணியை வலுப்படுத்துவதற்காக கட்சித் தலைவர்கள், கட்சி உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் ஆகியோரின் யோசனைகளையும் விமர்சனங்களையும் வரவேற்பதாக பக்கத்தான் தெரிவித்தது. ஆயினும், விமர்சனங்கள் ஆக்கபூர்வமானதாகவும் கூட்டணியின் ஒற்றுமையை பலப்படுத்தும் விதத்திலும் இருக்கவேண்டும் என்றும் அது கூறியது.
நாட்டை மறுசீரமைக்கும் முயற்சிக்கு அடித்தளத் தலைவர்கள் முதலான அனைத்துத் தலைவர்களின் ஆதரவு தேவைப்படுவதாக பக்கத்தான் ஹரப்பான் தெரிவித்தது.
'ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்' நாளிதழுக்கு நூருல் இஸா அளித்த பேட்டி ஞாயிற்றுக்கிழமை அந்தப் பத்திரிகையில் வெளிவந்தது. தனது குடும்பத்தின் வாழ்க்கை மீதும் நாட்டின் கட்டமைப்புகளின் மீதும் கடுமையான சேதத்தை ஏற்படுத்தியதாக திருவாட்டி நூருல் இஸா தெரிவித்தார். 1998ஆம் ஆண்டில் தமது தந்தை அன்வார் இப்ராஹிம் சிறைக்கு அனுப்பப்பட்டதை அவர் இதில் பூடகமாகக் குறிப்பிட்டார்.