ரபேல் போர்விமானங்கள் வாங்குவதற்கான ஒப்பந்தத்தின் தொடர்பில் மோசடி ஏதேனும் செய்யப்பட்டதா என்பதை விசாரிக்கும் வழக்கின் தீர்ப்பை இந்திய உச்சநீதிமன்றம் இன்று பிற்பகல் வெளியிட உள்ளது. இந்த விவகாரம் தொடர்பில் பாரதிய ஜனதா கட்சி முறைகேடாக நடந்துள்ளதாக காங்கிரஸ் முதலான எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு முன்வைத்ததை அடுத்து மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் உள்ளிட்ட சிலர் இது தொடர்பாக வழக்கு தொடர்ந்தனர்.
ஆயினும் தங்கள் தரப்பில் எந்தத் தவறும் நேரவில்லை என்று இந்திய அரசாங்கம் தெரிவித்தது.
திருடப்பட்ட சில ரகசிய ஆவணங்களின் அடிப்படையில் வழக்கு தொடரப்பட்டதால் அதனை நீதிமன்றம் நிராகரித்திருக்கவேண்டும் என்று இந்த வழக்கில் இந்திய அரசாங்கத்தைப் பிரதிநிதிக்கும் தலைமைச் சட்ட அதிகாரி கே. கே வேணுகோபால் கூறினார். இந்த ஆவணங்களின் கசிவு அதிகாரபூர்வ ரகசியங்கள் தொடர்பான சட்டத்திற்கு விரோதமானது என்று திரு வேணுகோபால் சொன்னார்.
ஆவணங்களில் ரபேல் விமானங்களின் விலைகள் வெளியிடப்பட்டன. இது பிரான்சுக்கு இந்திய அரசாங்கம் கொடுத்திருந்த உறுதிக்குப் புறம்பாக இருப்பதாக அவர் கூறினார்.
ஆனால் இந்த வழக்கில் மக்களின் நலன் குறித்த அக்கறை மேலோங்குவதால், அதிகாரபூர்வ ரகசியங்கள் சட்டத்தைக் காட்டிலும் தகவல் பெறுவதற்கான உரிமை தொடர்பான சட்டம் (Right to Information Act) முக்கியத்துவம் பெறுவதாக வழக்கை விசாரிக்கும் நீதிபதிகளில் ஒருவரான நீதிபதி கே.எம். ஜோசஃப் தெரிவித்தார்.