இந்தியப் பிரதமர் மோடி ஒரு திருடன் என்று உச்ச நீதிமன்றமே கூறிவிட்டதாக முன்னர் கூறியிருந்த ராகுல் காந்தி தமது கூற்று தவறு என்பதை ஒப்புக்கொண்டுள்ளார். தேர்தல் பிரசாரத்தில் உணர்ச்சிவசப்பட்டு தாம் அவ்வாறு கூறியிருந்ததாகத் திரு ராகுல் தெரிவித்தார்.
இதை தாம் வேண்டுமென்று கூறியதாக எதிராளிகள் கருதுவது தவறு என்றும் திரு ராகுல் தெரிவித்தார். மேலும், "காவலாளி திருடிவிட்டான்" என்று நீதிமன்றம் எவரையும் வர்ணிக்காது என்பது அனைவரும் அறிந்ததே என்றும் திரு ராகுல் கூறினார்.
திரு ராகுல் இரு வாரங்களுக்கு முன்பு இந்தக் கருத்தைக் கூறியது குறித்து உச்ச நீதிமன்றம் கடந்த வாரம் அவரிடம் விளக்கம் கேட்டிருந்தது. அத்துடன் பாரதிய ஜனதா கட்சி இது குறித்து அவருக்கு எதிராக அவமதிப்பு வழக்கைத் தொடர்ந்தது. இந்த மனுவை நீதிமன்றம் நாளை பரிசீலிக்கும்.
ஊடகங்களில் வெளியிடப்பட்ட ரகசிய ஆவணங்கள் ரஃபேல் விமான நீதிமன்ற வழக்கில் சாட்சியங்களாகப் பயன்படுத்தப்படலாம் என்று உச்ச நீதிமன்றம் ஏப்ரல் 10ஆம் தேதி தெரிவித்திருந்தது. இந்த அறிவிப்பு வெளிவந்த சில மணி நேரங்களில் திரு ராகுல் அவ்வாறு கூறினார்.