டோவர் எம்ஆர்டி நிலையத்துக்கு அருகில் நேற்று முன்தினம் சாலை விபத்து ஒன்று நிகழ்ந்தது. கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து பேருந்து, டாக்சி, சாலையோர விளக்குக் கம்பம் ஆகியவற்றின் மீது மோதியது.
காமன்வெல்த் அவென்யூ வெஸ்ட்டின் ஆக வலது தடத்தில் அந்த கார் சென்றுகொண்டிருந்தபோது அதன் ஓட்டுநர் வேறொரு தடத்திற்கு மாற முயன்றார்.
அப்போது காரின் கட்டுப்பாட்டை அவர் இழக்க அது நடுத் தடத்தில் சென்றுகொண்டிருந்த டாக்சி மீது மோதியது. அதையடுத்து, சாலையோர விளக்குக் கம்பம் மீதும் பேருந்தின் பின்பகுதி மீதும் மோதியது. காலை 9.20 மணி அளவில் விபத்து குறித்து தகவல் கிடைத்ததாக போலிசார் தெரிவித்தனர். விபத்தில் சிக்கிய டாக்சியின் ஓட்டுநர் தேசிய பல்கலைக்கழக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். மருத்துவமனைக்குச் சென்றபோது அந்த 64 வயது மாது சுயநினைவுடன் இருந்ததாக தெரிவிக்கப்பட்டது.