திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பதவி மீதான பசியின் காரணமாக பாரதிய ஜனதா கட்சியுடன் (பாஜக) பேசி வருவதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்திருக்கிறார். பாஜக வெற்றி பெறும் என நம்பி ஸ்டாலின் தங்களிடம் பேசிவருவதாக தமிழிசை, தூத்துக்குடியில் செய்தியாளர்கள் முன்னிலையில் தெரிவித்தார்.
பாஜகவுடன் ஸ்டாலின் பேசி வருவதாக அதிமுகவைச் சேர்ந்த அமைச்சர் ஜெயக்குமார் கூறியது உண்மை எனக் கூறிய தமிழிசை, ஸ்டாலின் எந்த ஒரு தரப்பினர் பக்கம் இல்லாமல் அடிக்கடி அணி மாறி வருவதாகக் கூறினார். முதலில் ராகுல் காந்தி, பின்னர் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் எனப் பலரைச் சந்தித்த ஸ்டாலின் குழப்பத்தில் இருப்பதாக தமிழிசை விமர்சித்துள்ளார். "திமுக நிறம் மாறுவது வாடிக்கை," என்றார் தமிழிசை.
ஆயினும் சந்திரசேகர ராவ்வின் சந்திப்புப் பற்றி செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், அவர் கோயில்களுக்குச் செல்லத்தான் தமிழகத்திற்கு வந்திருந்ததாகவும் வழியில் தம்மை மரியாதை நிமித்தமாகச் சந்தித்ததாகவும் ஸ்டாலின் கூறினார். அவர் மூன்றாவது அணியை அமைப்பதற்காக தம்மைக் காணவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
இந்நிலையில், திருப்பரஙக்குன்றம் தொகுதி இடைத்தேர்தலிலுள்ள அதிமுக வேட்பாளரை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்ட தமிழிசை, உலக நாயகன் எனத் தன்னைக் கூறிக்கொள்ளும் நடிகர் கமல்ஹாசன் இப்போது உளறல் நாயகனாக மாறியிருப்பதாகக் கூறினார். இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்துவான நாதுராம் கோட்சே என்று கூறிய பெரும் சர்ச்சையைக் கிளப்பிய கமல்ஹாசன், பிரசாரத்தில் ஈடுபடுவதற்குத் தடை விதிக்கப்படவேண்டும் என்று தமிழிசை சொன்னார்.