பெட்டிர் ரோட்டுக்கு அருகில் குரங்குக் குட்டி ஒன்று அடிபட்டுக் கிடந்தது. அருகில் அதன் தாய் என்று கருதப்படும் பெரிய குரங்கு ஒன்று தவித்துக் கொண்டிருந்தது. அந்தச் சாலையில் சென்ற ஒரு பெண், அங்கிருந்த குரங்குகளைக் காக்கும் பொருட்டு வாகனங்களை நெறிப்படுத்திக்கொண்டிருந்தார் என்றார் திருவாட்டி லோ.
நீண்ட வாலுடைய குரங்குகள் அதிகம் காணப்படும் புக்கிட் தீமா இயற்கை வனப்பகுதிக்கு அருகில் நிகழ்ந்த இந்தச் சம்பவத்தில் உதவ திருவாட்டி லோவும் அவரது கணவரும் காரிலிருந்து இறங்கினர். "குரங்குக் குட்டி அசைவின்றி காணப்பட்டது. அது இறந்து போயிருக்குமோ என்று நினைத்தேன்.
அது ஒரு கையைத் தூக்கிக் காட்டியதையடுத்து குரங்குக் குட்டி உயிருடந் இருப்பது தெரிந்தது," என்ற திருவாட்டி லோ, அதன் உடம்பில் காயம் தென்படவில்லை என்றார். குப்பை சேகரிக்கும் வண்டியை ஓட்டிச்சென்ற இருவர் தங்களது வாகனத்தை விட்டு இறங்கினர். அந்த வாகனத்தின் ஓட்டுநர் குரங்குக் குட்டியை எடுத்து சாலையோரத்தில் உள்ள மரத்துக்கு அருகில் விட்டார். அதனை பெரிய குரங்கு தூக்கிக்கொண்டு காட்டுக்குள் சென்று மறைந்தது.