கூச்சிங்: இறால் மீன்களைப் பிடிப்பதற்காக விரிக்கப்பட்ட வலையில் பெரிய முதலை ஒன்று சிக்கியது. மலேசியாவின் சரவா மாநிலத்தில் உள்ள சுங்கை பாகோ ஆற்றில் சிக்கிய அந்த பெண் முதலை சுமார் 3.6 மீட்டர் நீளமும் கிட்டத்தட்ட 200 கிலோ எடையும் கொண்டது. 45 நிமிட கடும் முயற்சிக்குப் பிறகு அந்த முதலையைக் கட்டி மீட்டு வந்ததாக சரவா வனவியல் கழகத்தைச் சேர்ந்த வான் மஸ்லான் வான் மஜியான் கூறினார். தமது குழுவினர் அந்த முதலையை கம்போங் பாகோ படகுத்துறைக்குக் கொண்டு வந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
பின்னர் பாரந்தூக்கி மூலம் லாரி ஒன்றில் ஏற்றப்பட்ட முதலை மாத்தான் வனவிலங்கு நிலையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது. கம்போங் பாகோ கிராம மக்களிடமிருந்து நேற்றுக் காலை 6.10 மணியளவில் முதலை பற்றிய தகவலைத் தமக்குத் தெரிவித்ததாகக் கூறினார் முதலை பிடிப்பதில் 28 ஆண்டு அனுபவம் வாய்ந்த திரு வான் மஸ்லான். சுங்கை பாகோவில் இவ்வாண்டு பிடிபட்டிருக்கம் ஐந்தாவது முதலை இது.