கேன்பேரா: சளிக்காய்ச்சல் காரணமாக ஆஸ்திரேலியாவில் 200க்கும் மேற்பட்டோர் மரணம் அடைந்திருப்பதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் நிலைமை இன்னும் மோசமாகும் அபாயம் இருப்பதாக அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இவ்வாண்டில் சளிக்காய்ச்சல் காரணமாக இதுவரை குறைந்தது 228 பேர் மாண்டுவிட்டதாகவும் 100,000க்கும் மேற்பட்டோர் நோய்வாய்ப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
கடந்த ஆண்டு சளிக்காய்ச்சல் காரணமாக ஆஸ்திரேலியாவில் 58,824 பேர் மட்டுமே நோய்வாய்ப்பட்டனர்.
“மிக மோசமான நிலையை நாங்கள் அனுபவித்து வருகிறோம். ஜூலைக்கும் செப்டம்பருக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் சளிக்காய்ச்சலால் மேலும் பலர் பாதிக்கப்படுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது,” என்று ஆஸ்திரேலிய மருத்துவச் சங்கத்தின் தலைவர் ரிச்சர்ட் கிட் கூறினார்.
ஆஸ்திரேலிய அரசாங்கத்தின் ஆதரவுடன் கட்டணக் கழிவுடன் சளிக்காய்ச்சலுக்கு தடுப்பூசி போடும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. இதன்மூலம் 11 மில்லியனுக்கும் மேற்பட்டோர் தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகும் நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளது.