வசதி குறைந்த பொதுப்பிரிவினருக்குக் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் 10 விழுக்காடு ஒதுக்கீடு வழங்குவது குறித்த விவகாரத்தைக் கலந்துரையாடுவதற்காகத் தமிழ்நாட்டில் அனைத்துக் கட்சிக் கூட்டம் இன்று நடைபெறவுள்ளது. தமிழகத்தின் முக்கிய அரசியல் கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகளை அதிமுக மாநில அரசு நிர்வாகத்தினர் சந்திக்கவுள்ளனர்.
இந்தியா முழுவதிலும் செயல்படுத்தப்படவேண்டிய இந்த உத்தரவை சில மாநிலங்கள்தான் செயல்படுத்துகின்றன. தமிழ்நாடு இதனை இன்னும் செயல்படுத்தவில்லை. தமிழகத்தில் மட்டும் 69 விழுக்காடு இடஒதுக்கீடு சட்டமாக இருக்கும் நிலையில் இந்தப் புதிய ஒதுக்கீடு எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படும்.
இந்தப் புதிய ஒதுக்கீட்டைக் கண்டித்த திமுக தலைவர் மு.க ஸ்டாலின், இது சமூக நீதிக்கு எதிரானது என்று கூறியுள்ளார்.
இந்தக் கூட்டம் இந்திய நேரப்படி மாலை 5.30 மணிக்கு (சிங்கப்பூர் நேரப்படி இரவு 8 மணி) நடைபெறவுள்ளது. கூட்டத்தில் கலந்துகொள்ளும் பல்வேறு கட்சிகளின் பிரமுகர்கள், கலந்துரையாடலுக்குப் பிறகு தீர்மானம் ஒன்றை வெளியிடுவர் என்றும் அது இந்திய மத்திய அரசுக்கு அனுப்பப்படும் என்றும் இந்திய ஊடகங்கள் கூறுகின்றன.