சென்னை: ஸ்டெர்லைட் ஆலையால் பொதுமக்கள் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பதால், அவர்கள் தரப்பு வாதத்தையும் கேட்க வேண்டும் என உயர் நீதிமன்றத்தில் வலியுறுத்தப்பட்டது.
மேலும் வழக்கு விசாரணையின் போது நாட்டில் அதிகமாசு ஏற்படுத்தும் 17 ஆலைகளில் ஸ்டெர்லைட் ஆலையும் ஒன்று என நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
தூத்துக்குடி மக்களின் நீண்ட போராட்டத்தை அடுத்து ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டுள்ளது. இதையடுத்து அதை மீண்டும் திறக்க உத்தரவிடக் கோரி, அதன் உரிமையாளரான வேதாந்தா நிறுவனம் வழக்கு தொடுத்துள்ளது.
இந்த வழக்கு மீதான விசாரணை நேற்று முன்தினம் மூன்று நீதிபதிகளைக் கொண்ட அமர்வின் முன் நடைபெற்றது.
அப்போது ஆலைக்கு எதிராக போராட்டங்கள் நடத்தி வரும் பேராசிரியர் பாத்திமா தரப்பில் மூத்த வழக்கறிஞர் வைகை வாதிட்டார்.
தமது வாதத்தின் போது விவசாய நிலப் பகுதியில் ஆலை அமைக்கப்பட்டுள்ளது என்றும், இது விதிமீறல் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
“நாட்டில் அதிக மாசு ஏற்படுத்தும் அலைகளில் ஸ்டெர்லைட்டும் ஒன்று. இதை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகமே தெரிவித்துள்ளது. இந்நிலையில், மாசு ஏற்படுத்தவில்லை என தொடர்ந்து ஸ்டெர்லைட் தரப்பில் தவறான தகவல்கள் தெரிவிக்கப்படுகிறது.
“தமிழக அரசு, ஸ்டெர்லைட் ஆலைக்கு உடந்தையாக செயல்பட்டது துரதிருஷ்டவசமானது,” என்றார் மூத்த வழக்கறிஞர் வைகை.