ஜம்மு- காஷ்மீரில் 19ஆம் தேதி திங்கட்கிழமை முதல் பள்ளிகளும் கல்லூரிகளும் மீண்டும் திறக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜம்மு- காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிக்கின் ஆணையை அடுத்து, தலைநகர் ஸ்ரீநகரில் உள்ள தலைமைச் செயலகமும் மற்ற அரசு அலுவலகங்களும் நேற்று முதல் வழக்கம்போல் செயல்படத் தொடங்கின.
இம்மாதம் 5ஆம் தேதி ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு, 370 சட்டப் பிரிவின்கீழ் வழங்கப்பட்டு வந்த சிறப்புத் தகுதி ரத்து செய்யப்படுவதாக இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்தார். அத்துடன், அம்மாநிலமும் ஜம்மு-காஷ்மீர், லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டது.
இந்த அறிவிப்புக்கு முன்னதாகவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜம்மு -காஷ்மீரில் ராணுவம் குவிக்கப்பட்டது; இணையச் சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டன; ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இந்த அதிரடி அறிவிப்புக்கு ஆதரவாகவும் எதிர்த்தும் குரல்கள் கிளம்பின.