ஸ்ரீநகர்: காஷ்மீர் மக்கள் அனைவரும் கூண்டில் அடைக்கப்பட்டுள்ள விலங்குகளைப்போல வீடுகளுக்குள்ளேயே சிறைபட்டுக் கிடப்பதாக முன்னாள் முதல்வர் மெஹ்பூபா முஃப்தியின் மகள் இல்டிஜா ஜாவேத் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிற்குக் கடிதம் எழுதி இருக்கிறார்.
“இந்தியாவின் மற்ற பகுதிகளில் எல்லாம் சுதந்திர நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனால் நாங்கள் மட்டும் அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டு, கூண்டில் அடைக்கப்பட்டுள்ள விலங்குகளைப்போல வீடுகளுக்குள் முடங்கியுள்ளோம்.
“ஊடகங்களுக்குப் பேட்டியளித்ததற்காக என்னை வீட்டுச் சிறையில் வைத்துள்ளதாகப் பாதுகாப்புப் படையினர் கூறினர். இன்னொரு முறை பேட்டியளித்தால் கடுமையான விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என்றும் நான் மிரட்டப்பட்டேன். ஒரு குற்றவாளியைப்போல நடத்தப்படுகிறேன்; தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறேன். என்னைப்போல வெளிப்படையாகப் பேசும் காஷ்மீர் மக்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அஞ்சுகிறோம்,” என்று ஒலிப்பதிவு மூலம் இல்டிஜா தெரிவித்துள்ளார்.