தமிழகத்தில் இருக்கும்போது பெரும்பாலும் வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டையில் காணப்படும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளிநாட்டு சுற்றுப்பயணத்தின்போது ஒவ்வொரு நாளும் வெவ்வேறு நிறங்களில் கோட், சூட் போட்டு அசத்தினார். அவர் மேற்கத்திய உடையில் இருக்கும் படங்கள் பல சமூக ஊடகங்களில் பகிரப்பட்டன.
இந்த நிலையில் தமது வெளிநாட்டுப் பயணத்தை முடித்துவிட்டு நேற்று காலை சென்னை திரும்பிய அவரை தமிழக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர். விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வரிடம் கோட், சூட் உடை குறித்த கேள்வி கேட்கப்பட்டது.
இதற்குப் பதிலளித்த முதல்வர் பழனிசாமி, “தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக வெளிநாடு செல்லும்போதும் வெளிநாட்டில் தொழிலதிபர்களைச் சந்திக்கும்போதும் அவர்களின் உடையில் இருந்தால்தான் நன்றாக இருக்கும். அப்போதுதான் நமக்கு மரியாதை கிடைக்கும். நாங்கள் தொழில் தொடங்கப் போகவில்லை, தொழில் முதலீடுகளை ஈர்க்கவே சென்றோம்,” என்று விளக்கம் அளித்தார்.
அவரது கருத்தை இணையவாசிகள் பலவாறாக விமர்சித்து வரகின்றனர். “எந்த வெளிநாட்டுத் தொழிலதிபராவது அல்லது வெளிநாட்டுத் தலைவர்களாவது தமிழகம் வரும்போது நம்முடைய கலாசார உடைகளை அணிகின்றார்களா?,” என்ற கேள்வியை அவர்கள் எழுப்பியுள்ளனர்.