சிங்கப்பூரின் இருநூற்றாண்டு நினைவையொட்டி வெளியிடப்பட்ட $20 நோட்டுகளைப் பெற விரும்பும் சிங்கப்பூரர்க ளும் நிரந்தரவாசிகளும் go.gov.sg/mas என்ற இணையத் தளத்தில் அக்டோபர் 31ஆம் தேதி வரை பதிவு செய்யலாம். ஒவ்வொருவரும் 10 நோட்டுகள் வரை கோரலாம். எனினும் ஒருவர் கேட்கும் எண்ணிக்கையில் நோட்டுகள் அவருக்குக் கிடைக்காமல் போகலாம். அதிகமான கோரிக்கைகள் இருந்தால் ஒவ்வொரு விண்ணப்பதாரருக்கும் ஒரு நோட்டாவது கிடைக்கும் வகையில் பகிர்ந்தளிக்கப்படும் என ஆணையம் கூறியது. நவம்பர் 3ஆம் தேதி ஏற்றுக்கொள்ளப்பட்ட கோரிக்கையாளர்களுக்கு தகவல் அளிக்கப்படும். அவர்கள் இருநூற்றாண்டு $20 நோட்டுகள் உரிய தொகைக்கு மாற்றிக்கொள்ளலாம்.
கடந்த ஜூன் மாதம் வெளியிடப்பட்ட இருநூற்றாண்டு $20 நோட்டுகளுக்கு பொதுமக்களிடம் பெரும் வரவேற்பு இருந்தது. மக்கள் வங்கிகளில் நீண்ட வரிசையில் நின்று அந்த நோட்டுகளை வாங்கினர். வெளியிடப்பட்ட ஒருவார காலத்துக்குள் அவை தீர்ந்துவிட்டதால், சமூக வலைத் தளங்களில் கூடுதல் தொகை கொடுத்தும் வாங்கினர். தற்போது மேலும் இரண்டு மில்லியன் இருநூற்றாண்டு $20 நோட்டுகளை சிங்கப்பூர் நாணய ஆணையம் வெளியிட்டு உள்ளது.