வீடுகளுக்கும் வர்த்தகங்களுக்குமான மின்சாரக் கட்டணம் இம்மாதத்திலிருந்து டிசம்பர் மாதம் வரை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இம்மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையிலான மின்சாரக் கட்டணம், கடந்த காலாண்டுடன் ஒப்புநோக்க சராசரியாக 3.3 விழுக்காடு குறையும் (அதாவது மணிக்கு ஒரு கிலோவாட்டுக்கு 0.79 காசு) என எஸ்பி குழுமம் தெரிவித்துள்ளது. மின்சார உற்பத்திக்காகப் பயன்படுத்தப்படும் இயற்கை எரிவாயுவின் விலை முந்திய காலாண்டைக் காட்டிலும் குறைந்திருப்பது இதற்குக் காரணம் என்றது எஸ்பி குழுமம்.
அடுத்த மூன்று மாதங்களுக்கு, பொருள் சேவை வரிக்கு முந்திய மின்சாரக் கட்டணம் மணிக்கு ஒரு கிலோவாட்டுக்கு 24.22 காசிலிருந்து 23.43 காசுக்குக் குறையும். எஸ்பி குழுமத்திடமிருந்து மின்சாரம் வாங்கும் நான்கறை வீடுகளின் மாதாந்திர மின்சாரக் கட்டணம் $2.84 குறையும்.
இவ்வாண்டு ஜூலை மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான கட்டணம் மணிக்கு ஒரு கிலோவாட்டுக்கு 24.22 காசு. இதுவே ஏறத்தாழ கடந்த ஐந்து ஆண்டுகளில் வசூலிக்கப்பட்ட ஆக அதிகமான கட்டணம். 2014ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்திலிருந்து டிசம்பர் மாதம் வரை இந்தக் கட்டணம் பொருள் சேவை வரிக்கு முன்பு $25.28ஆக இருந்தது.
எரிபொருள் சந்தை ஆணையம் அமைத்துள்ள வழிகாட்டி நெறி முறைகளின்படி எஸ்பி குழுமம் மின்சாரக் கட்டணத்தை ஒவ்வொரு காலாண்டும் மறுஆய்வு செய்கிறது.