பெட்டாலிங் ஜெயா: மலேசியாவில் தட்டம்மைத் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 340 விழுக்காடு உயர்ந்துள்ளது. தட்டம்மைக்கு எதிராகப் பிள்ளைகள் தடுப்பூசி போட்டுக்கொள்ளாததே இதற்கு முக்கிய காரணம் என்று மலேசியாவின் சுகாதாரத் துறையின் தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார். கடந்த ஆண்டில் 1,318 பேர் தட்டம்மையால் பாதிக்கப்பட்டனர். அவர்களில் இருவர் மரணம் அடைந்தனர். இவ்வாண்டில் யாரும் தட்டம்மை காரணமாக மரணம் அடையவில்லை," என்று டாக்டர் நூர் ஹிஷாம் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டார்.
மலேசியாவின் தேசிய தடுப்பூசித் திட்டத்தின்கீழ் 9 வயதுக்கும் 12 வயதுக்கும் இடைப்பட்ட பிள்ளைகளுக்கு தட்டம்மைக்கு எதிரான தடுப்பூசி வழங்கப்படுகிறது. இருப்பினும், வழங்கப்படும் தடுப்பூசிகள் 'ஹலால்' அல்ல என்ற அச்சம் பெற்றோர் பலர் மத்தியில் நிலவி வருவதால் பல பிள்ளைகள் தடுப்பூசி போட்டுக்கொள்ளாமல் இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. தடுப்பூசிகளை எதிர்ப்பவர்களின் எண்ணிக்கை கெடா மாநிலத்தில் ஆக அதிகம். தடுப்பூசிகள் 'ஹலால்' விதிமுறைக்கு உட்பட்டவை என்று மலேசியாவின் தேசிய ஃபாட்வா மன்றம் வலியுறுத்தியும் இந்நிலை தொடர்கிறது. மலேசியாவில் உள்ள மாணவர்களுக்குத் தடுப்பூசிகள் போடுவதைக் கட்டாயமாக்குவது குறித்து சுகாதார அமைச்சை சேர்ந்த அதிகாரிகளுடன் கலந்துரையாடவிருப்பதாக அந்நாட்டின் துணைக் கல்வி அமைச்சர் பி. கமலநாதன் தெரிவித்தார்.