சாலையோர நடைபாதையிலிருந்து திடீரென சாலையில் ஓடிய 3 வயது சிறுவனை கார் ஒன்று மோதியதையடுத்து அச்சிறுவன் நலமாக இருக்கிறார் என்று ஸ்ரீ ருத்ர காளியம்மன் ஆலயத்தின் நிர்வாகக் குழுத் தலைவர் திரு அழகப்பன் தெரிவித்தார்.
“சம்பவத்திற்கு உள்ளாகிய சிறுவனின் பெற்றோரிடம் பேசியதில் அவர் நலமாக இருக்கிறார் என்று அறிகிறோம். சிங்கப்பூரர்களான அந்த குடும்பத்தினர் அந்த நாளில் கோயிலுக்குப் பிரார்த்தனை செய்துவிட்டுத் திரும்பியபோது இந்தச் சம்பவம் நிகழ்ந்தது,” என்றார் திரு அழகப்பன்.
டெப்போ ரோடு ஸ்ரீ ருத்ர காளியம்மன் ஆலயத்திற்கும் சீ டியேன் டியேன் ஆலயத்திற்கும் இடையிலுள்ள குறுஞ்சாலையில் இந்த விபத்து ஏற்பட்டது.
அச்சாலையில் வேண்டுகோள்களைப் பொருட்படுத்தாது பலரும் கார்களை நிறுத்தி வருவதாகவும் அந்தப் போக்கைத் தடுத்து நிறுத்த ஸ்ரீருத்ர காளியம்மன் ஆலயம் கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்துள்ளதாகவும் திரு அழகப்பன் குறிப்பிட்டார்.
கார்களை நிறுத்த வேண்டாம் என கோயில் சார்பாக கேட்டுக் கொள்ளும் அறிக்கைகளும் அறிவிப்புகளும் ஓட்டுநர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தமிழ் முரசு அறிகிறது. அப்பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவது பிரச்சினைக்கு ஒரு நிரந்தர தீர்வாக அமையும் என பரவலாகக் கருதப்படுகிறது.
“கார்களை நிறுத்த வேண்டாம் என்ற அறிக்கைகள் மட்டுமில்லை, கூம்புகளும் வைத்துள்ளோம். ஆனால் அதைப் பொருட்படுத்தாமல் கார் நிறுத்தம் செய்பவர்களும் உண்டு. எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்களைத் தவிர்க்க கோயில் நிர்வாகம் தக்க நடவடிக்கைகளை எடுக்கும்,” என்றார் திரு அழகப்பன்.
விபத்தில் சிக்கிய சிறுவனோடு இன்னொரு பிள்ளையுடன் இரு பெண்கள் ருத்ர காளியம்மன் ஆலயத்திற்கு வெளியே சாலையோர நடைபாதையில் நடந்துகொண்டிருந்தனர்.
அப்போது அச்சிறுவன் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் திடீரென சாலையின் குறுக்கே ஓடிய தும் அப்போது கண்ணிமைக்கும் நேரத்தில் சிவப்பு நிற கார் ஒன்று அவன் மீது மோதுவதும் காணொளியில் தெரிந்தது.
அது நேர்ந்துவிடக்கூடாது என்று முன்னரே சிறுவன் பின்னால் ஓடிவந்த பெண், சிறுவன் அடிபட்டு கீழே விழுந்ததைக் கண்டு அலறினார். அந்தப் பெண், சிறுவனின் தாயாரா என்பது உறுதி செய்யப்படவில்லை.
இருந்தபோதும் மோதப்பட்ட சிறுவன், கார் சக்கரங்களின் நடுவே விழுந்ததும் கார் சென்ற பின்னர் எழுந்து நின்றதும் காணொளியில் தெரிந்தது. இந்தச் சிறுவன் அப்பகுதியிலுள்ள பெதெஸ்டா பாலர் பள்ளியில் படிப்பதாக தமிழ் முரசு அறிகிறது.
பார்ப்போரை பதைபதைப்புக்கு உள்ளாக்கும் இந்தக் காணொளியை தமிழ் முரசின் இணையப்பக்கத்தில் காணலாம்.
அக்டோபர் 6ஆம் தேதி, ஞாயிற்றுகிழமை இரவு முதல் இந்த காணொளி சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவியது. இதுபோன்ற விபத்து இனி நேராமல் இருக்க பலரும் யோசனைகளைக் கொட்டினர்.