எண், எழுத்து அறிவு, பிரச்சினைகளைத் தீர்க்க மின்னிலக்க கருவிகளைப் பயன்படுத்துவது போன்ற திறன்களில் இளம் சிங்கப்பூரர்கள் உலகளவில் சிறந்து விளங்குகிறார்கள். எனினும் மூத்த குடிமக்கள் எண், எழுத்து ஆற்றல்களில் சராசரிக்கும் குறைவான திறமையுடன் பின்தங்கி இருக்கிறார்கள். 16 வயதுக்கும் 65 வயதுக்கும் இடைப்பட்ட 5,468 சிங்கப்பூரர்களிடம் பொருளியல் ஒத்துழைப்பு, உடன்பாடு அமைப்பின் அனைத்துலக பெரியோர் திறன் மதிப்பீட்டுத் திட்டம் (Piaac) 2014 முதல் 2015 வரையில் மேற்கொண்ட ஆய்வில் இந்த விவரங்கள் தெரிய வந்துள்ளன.
34 நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 16 வயதுக்கும் 34 வயதுக்கும் இடைப்பட்ட சிங்கப்பூரர்கள் மின்னிலக்க சாதனங் களைப் பயன்படுத்தி பிரச்சினைகளைத் தீர்ப்பதில் இரண்டாவது இடத்திலும்; கணக்கு அறிவில் ஐந்தாவது இடத்திலும்; எழுத்தறிவில் ஒன்பதாவது இடத்திலும் வந்தனர். ஆனால் 45 வயதுக்கும் 65 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் பொருளியல் ஒத்துழைப்பு, உடன்பாடு அமைப்பின் சராசரி எண், எழுத்து அறிவு நிலைக்கும் கீழான நிலையில் இருந்தனர். இரு வயது பிரிவினருக்கும் இடையே உள்ள இடைவெளி தென்கொரியா, பின்லாந்து போன்ற நாடுகளைவிட சிங்கப்பூரில் அதிகமாக உள்ளது. எண், எழுத்து அறிவாற்றலில் ஜப்பான் முதலிடத்தைப் பிடித்தது.
இந்த இடைவெளிக்கு மூத்த தலைமுறையினர் குறைந்த அளவு கல்வி கற்றிருப்பதும், பிற மொழிகளில் படித்த அவர்கள் இந்த சோதனையில் பயன்படுத்தப்பட்ட மொழிக்கு பழக்கமில்லாமல் இருப்பதும் காரணங்களாக இருக்கலாம் என்று அமைப்பு கூறியது. சிங்கப்பூரில் ஆங்கிலத்தில் ஆய்வு நடத்தப்பட்டது.