உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டிக்கான தகுதி சுற்று ஆட்டத்தில் உஸ்பெகிஸ்தானுக்கு எதிராக சிங்கப்பூர் இன்று களமிறங்குகிறது. இந்த ஆட்டம் தேசிய விளையாட்டரங்கத்தில் நடைபெறுகிறது.
இதுவரை நடைபெற்ற ஆட்டங்களில் சிங்கப்பூர் ஓர் அளவுக்கு நன்றாக செயல்பட்டுள்ளது. முதல் ஆட்டத்தில் ஏமனுடன் 2-2 என்று சமநிலை கண்டது. பாலஸ்தீனத்தை 2-1 எனும் கோல் கணக்கில் சிங்கப்பூர் தோற்கடித்தது. ஆனால் கடந்த வாரம் நடைபெற்ற ஆட்டத்தில் பலம் பொருந்திய சவூதி அரேபியாவிடம் 3-0 எனும் கோல் கணக்கில் சிங்கப்பூர் தோல்வியைத் தழுவியது.
இந்நிலையில், சிங்கப்பூர் ஆட்டக்காரர்களின் அணுகுமுறையை பயிற்றுவிப்பாளர் டட்சுமா யொஷிடா குறைகூறியுள்ளார்.
“நாங்கள் தற்காப்பில் மட்டும் கவனம் செலுத்துகிறோம். எங்களது சொந்த பெனால்டி எல்லைக்குள் அனைத்து வீரர்களையும் குவிக்கலாம். இதன்மூலம் எதிரணி அதிகம் கோல்கள் போடுவதை தடுத்து 1-0 அல்லது 2-0 எனத் தோல்வி அடையலாம். ஆனால் இந்த அணுகுமுறை எங்களுக்கு எவ்விதத்திலும் பலனளிக்காது.
“முன்னேற்றம் அடைவதற்கான வழியை நாங்கள் தேட வேண்டும். முயற்சி எடுக்காவிட்டால் வெற்றி பெற வாய்ப்பு இல்லை. ஆனால் எதிரணியின் பலவீனத்தைக் கண்டுபிடிக்க முயற்சி செய்தால் வெற்றி பெற வாய்ப்பு கிடைக்கலாம். முயற்சி மேற்கொள்வதே முக்கியம்,” என்றார் யொஷிடா.