சென்னை: சென்னை பெரும்பாக்கம் இந்திரா நகரைச் சேர்ந்தவர்கள் ஆனந்த், ஸ்டீபன். உறவினர்களான இவர்கள் நேற்று இரவு அதே பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு மது அருந்த சென்றனர். இரவு 10 மணிக்குள் டாஸ்மாக்கை மூடவேண்டும் என்கிற விதிமுறை உள்ளது. ஆனால் குறிப்பிட்ட நேரத்தை தாண்டி கடை செயல்பட்டது.
இரவு 11 மணி அளவில் டாஸ்மாக் கடையில் 6 பேர் கொண்ட கும்பல் புகுந்தது. அவர்களது கைகளில் கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் இருந்தன.
அந்த கும்பல் கடையில் மது அருந்திக்கொண்டு இருந்த ஆனந்த், ஸ்டீபன் இருவரையும் சுற்றிவளைத்து சரமாரியாக வெட்டியது.
இருவருக்கும் தலை, கழுத்து உள்ளிட்ட பல இடங்களில் சரமாரியாக வெட்டு விழுந்தது. இருவரும் ரத்தவெள்ளத்தில் மிதந்தனர்.
இவர்களை வெட்டிச் சாய்த்த கும்பல் மின்னல் வேகத்தில் தப்பியது. ஆறு பேரும் மூன்று மோட்டார்சைக்கிள்களில் தப்பிச் சென்றனர். தகவல் கிடைத்து பள்ளிக் கரணை போலிசார் விரைந்து வந்து பார்த்தபோது ஸ்டீபன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது தெரிய வந்தது.
ஆனந்த் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் மாண்டார். போலிசார் விசாரித்து வருகின்றனர்.