பெங்களுரு: அமளியில் ஈடுபடாமலேயே மக்கள் மனங்களை வெல்ல முடியும் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மாநிலங்களவையில் உரையாற்றிய அவர், சபையின் மையப்பகுதிக்குச் சென்று அமளியில் ஈடுபட்டால்தான் மக்கள் மனங்களை வெல்லமுடியும் என்று யாரும் கருதிவிடக்கூடாது என்றார்.
“மாநிலங்களவையில் கட்டுப்பாடுகளும் இருக்கும்; அனுசரித்துச் செல்வதும் இருக்கும். ஆனால், கட்டுப்படுத்துவதற்கும், தடை செய்வதற்கும் இடையே உள்ள வேறுபாட்டை உணரவேண்டும். “தேசியவாத காங்கிரஸ், பிஜு ஜனதாதளம் ஆகிய கட்சிகள் அவையின் மையப் பகுதிக்குச் செல்லாமல் நாடாளுமன்ற விதிகளைப் பின்பற்றி நடக்கின்றன,” என்று பிரதமர் மோடி பாராட்டுத் தெரிவித்தார். அவ்விரு கட்சிகளும் தங்கள் கருத்துக்களைத் திறம்பட முன்வைப்பதாகக் குறிப்பிட்ட அவர், பாஜக உள்ளிட்ட பிற கட்சிகள் அவ்விரு கட்சிகளிடமிருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்றார்.
“தேசியவாத காங்கிரஸ், பிஜு ஜனதாதளம் கட்சிகளைச் சேர்ந்த எம்பிக்கள் மிகவும் கண்ணியமுடன் செயல்படுகிறார்கள்.
“தங்கள் எல்லைக்குள் இருந்து கோரிக்கைகளைக் கூர்மையாக வலியுறுத்துகிறார்கள்.” என்றார் பிரதமர் மோடி.
மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரசுடன் இணைந்து ஆட்சி அமைக்க சிவசேனா முயன்று வருகிறது. இத்தகைய பரபரப்பான சூழலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியைப் பிரதமர் பாராட்டியுள்ளார்.