இந்த வட்டாரத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், உயிரோவிய படங்கள், திரைப்படங்கள் போன்ற ஊடக முயற்சிகளுக்கு இணைந்து நிதிவழங்க பங்காளித்துவ நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்துள்ள அரசாங்கம் அதற்காக 20 மில்லியன் டாலர் நிதியை ஒதுக்குகிறது.
திட்டங்களின் வகைமை குறித்த எந்தவிதமான கட்டுப்பாடுகளும் இல்லை, ஆனால் ஆர்வமுள்ளவர்கள் சிங்கப்பூரில் முதலீடு செய்ய வேண்டும். ஊடகத்துறை நிதி நிர்வாகத்தில் சிறந்து விளங்கியிருக்க வேண்டும்.
மெரினா பே சேண்ட்ஸ் கண்காட்சி, மாநாட்டு மண்டத்தில் நடைபெறும் ஆசியா டிவி அரங்கம், சந்தை (ஏடிஎஃப்) மற்றும் ‘ஸ்கிரீன்சிங்கப்பூர்’ நிகழ்ச்சியில் நேற்று பேசிய தொடர்பு தகவல் அமைச்சர் எஸ். ஈஸ்வரன் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
தென் கிழக்கு ஆசியாவிலேயே முதல்முறையாக இடம்பெறும் தகவல் தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையத்தின்(ஐஎம்டிஏ) இந்தத் திட்டம் பற்றிக் குறிப்பிட்ட அமைச்சர் ஈஸ்வரன், “வட்டார தயாரிப்புகளையும் திறன்களையும் மேற்படுத்த ஆழமான நிதித் திட்டத்தை உருவாக்கும் வேளையில், தனியார் துறையை ஈடுபடுத்த அரசாங்கம் அதிகம் செய்ய இலக்குக் கொண்டிருக்கிறது,” என்றார்.
அனைத்துலகப் பங்காளிகளுடன் உள்ளூர் கதைகளைக் கொண்ட தயாரிப்பாளர்களுடன் “சிங்கப்பூருடன் உருவாக்கப்பட்ட” தயாரிப்புகள் அல்லது திட்டங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் பல்வேறு முயற்சிகளில், ஊடகத் திட்டங்களுக்கு இணை நிதிவழங்க பங்காளித்துவ நிறுவனங்களுக்கான அழைப்பும் ஒன்று.
பரிமாற்றங்கள், பங்காளித்துவங்களை உருவாக்குவது, வட்டாரத் திறனாளிகள் தங்கள் கனவுகளை நனவாக்க உதவுவது போன்றவற்றில் உலகத்திற்கும் இந்த வட்டாரத்துக்கும் இடையே சிங்கப்பூர் நுழைவாயிலாக இருக்க முடியும் என்றார் அமைச்சர்.
மேலும், தகவல்தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையம், கூக் நிறுவனத்தின் பங்காளித்துவத்தின் மூலமாக தென்கிழக்கு ஆசியா, இந்திய சந்தைகளில் விநியோகிக்கக் கூடிய தயாரிப்புகளைத் தயாரிக்க உள்ளூர் ஊடக திறனாளிகள், நிறுவனங்களுக்கும் வாய்ப்பளிக்கப்படும்.
சிங்கப்பூர் ஊடகத் திருவிழாவின் நிகழ்வுகளான ‘ஸ்கிரீன்சிங்கப்பூர்’, ஆசியா டிவி அரங்கம், சந்தை (ஏடிஎஃப்) ஆகிய இரண்டும் நாளை வரை நடக்கும்.