டாக்கா: ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை 0-2 என மோசமான வகையில் இழந்தது, பாகிஸ்தான் கிரிக்கெட் பெருமையைக் காயப்படுத்திவிட்டது என பாகிஸ்தான் கிரிக்கெட் அணித் தலைவர் அசார் அலி (படம்) தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது.
இரண்டு போட்டிகளிலும் பந்தடிப்பு மற்றும் பந்து வீச்சால் ஆஸ்திரேலியாவுக்குப் பாகிஸ்தானால் ஈடுகொடுக்க முடியவில்லை. இரண்டு போட்டிகளிலும் இன்னிங்ஸ் தோல்வியடைந்தது.
இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் தோல்வியடைந்தது பாகிஸ்தான் கிரிக்கெட் பெருமையைக் காயப்படுத்தி விட்டது என அந்த அணித் தலைவர் அசார் அலி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அசார் அலி கூறுகையில் ‘‘ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இரண்டு போட்டிகளிலும் நாங்கள் பெற்ற தோல்வியின் விதம் மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது. ஆஸ்திரேலியா மண்ணில் தோற்றதால் பாகிஸ்தான், கிரிக்கெட் பெருமையை இழந்துவிட்டது. இதை ஏற்றுக்கொள்ள கஷ்டமாக உள்ளது.
“நாங்கள் ஆஸ்திரேலியாவுக்குச் சரியான தயார்படுத்துதலுடனும், நேர்மறையான மனநிலையுடனும்தான் சென்றோம். இரண்டு போட்டிகளிலும் இன்னிங்ஸ் தோல்வி அடைந்தது ஏற்றுக் கொள்ளக்கூடியது அல்ல. இதற்காக நான் சாக்குபோக்குச் சொல்ல விரும்பவில்லை,’’ என்றார்.