லண்டன்: லண்டனில் உள்ள ‘டேட் மார்டன்’ கலைக்கூடத்தின் பத்தாவது மாடியிலிருந்து ஆறு வயது சிறுவனைத் தூக்கியெறிந்து கொல்ல முயற்சி செய்த பிரிட்டிஷ் இளையர் தம்மீதான குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டுள்ளார். கீழே எறியப்பட்ட சிறுவன் பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்தவன். பத்தாவது மாடியிலிருந்து 30 மீட்டர் உயரத்துக்குக் கீழே எறியப்பட்ட சிறுவன் ஒரு கூரையின் மீது விழுந்தான். கடந்த ஆகஸ்ட் மாதம் நிகழ்ந்த இந்தச் சம்பவத்தால் அவனது முதுகுத்தண்டு, கைகள், கால்கள் ஆகியவற்றில் முறிவு ஏற்பட்டதுடன் அவனது மூளையில் ரத்தக் கசிவும் ஏற்பட்டது. அந்தச் சிறுவன் உயிர்தப்பியது அசாதாரணமானது என்று அரசு தரப்பு வழக்கறிஞர் எம்மா ஜோன்ஸ் குறிப்பிட்டார்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அந்தச் சிறுவனின் கைகால்கள், மூளைச் செயல்பாடு போன்றவை இன்னும் குணமடையவில்லை என்றும் அவனால் நடக்க முடியவில்லை என்றும் போலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
“எங்களுடைய வாழ்க்கை நான்கு மாதங்களுக்கு முன்பே நிலைகுத்தி விட்டது. நாங்கள் எப்போது வீட்டுக்கு, வேலைக்குத் திரும்புவோம் என்பதே தெரியவில்லை,” என்று சிறுவனின் பெற்றோர் குறிப்பிட்டதாக பிரிட்டிஷ் போலிசார் தெரிவித்தனர்.
சிறுவனுக்கும் அவனைத் தூக்கி எறிந்த பதினெட்டு வயது இளையரான ஜோன்டி பிரேவரிக்கும் இடையே எந்தத் தொடர்பும் இருந்திருக்க வாய்ப்பில்லை என்று போலிசார் கருதுகின்றனர்.
தனக்கு மனநலப் பிரச்சினை இருப்பதாகக் கருதியவர்களுக்கு தனது நிலைப்பாட்டை நிரூபிப்பதற்காகவே சிறுவனைத் தூக்கி வீசியதாக பிரேவரி போலிசாரிடம் கூறியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. “செய்தியில் இடம்பிடிக்க விரும்பினேன். நான் யார், ஏன் இதைச் செய்தேன் என்பதைப் பற்றியெல்லாம் செய்தி வெளியாகும்போது யாரும் என்னை வேறெதுவும் கூற முடியாது,” என்று பிரேவரி கூறியதாக போலிசார் தெரிவித்தனர்.
பிரேவரி மனநல மருத்துவ
மனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பிப்ரவரி மாதத்தில் இந்த வழக்கின் தீர்ப்பு அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.