அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பை பதவியிலிருந்து நீக்கக்கோரும் வழக்கின் நீதிபதியாக தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
நியமனம் செய்யப்பட்டவுடன் செனட் சபைக்குச் சென்ற நீதிபதி ராபர்ட்ஸ், அதிபர் டிரம்ப்பை பதவியிலிருந்து நீக்கக்கோரும் வழக்கில் நடுநிலைமையுடன் இருந்து நீதியை நிலைநாட்ட வேண்டும் என செனட்டர்களிடம் தெரிவித்தார். அதற்கான உறுதிமொழியை எடுத்துக்கொள்ளவும் வைத்தார்.
இதற்கு செனட்டர்கள் இணக்கம் தெரிவித்து, உறுதிமொழியை எடுத்துக்கொண்டு அதற்கான புத்தகத்தில் கையெழுத்திட்டனர்.
அதிபர் டிரம்ப்பை பதவியிலிருந்து நீக்கக்கோரும் வழக்கின் தீர்ப்பை செனட்டர்கள் முடிவெடுப்பர். நீதிபதி ராபர்ட்ஸ் வழக்கை வழிநடத்துவார்.
அதிபர் டிரம்ப் தமது பதவியைத் தவறான முறையில் பயன்படுத்தியதாகக் கூறி அவர் பதவி விலக வேண்டும் என குரல்கள் எழுந்துள்ளன.
ஜனநாயகக் கட்சியின் ஜோ பைடனுக்கு எதிராக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அதிபர் டிரம்ப் உக்ரேனுக்கு நெருக்குதல் தந்ததாகவும் விசாரணை நடத்தாவிடில் ராணுவ உதவி வழங்கப்படாது என்று அவர் மிரட்டியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
உக்ரேனிடம் அதிபர் டிரம்ப் முறையற்ற வகையில் நடந்துகொண்டது தொடர்பாக புதிய தகவல்கள் வெளிவந்துகொண்டிருக்கும்
போதிலும் அவை அனைத்தும் தமக்கு எதிராகப் பின்னப்பட்ட சதி என்று அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.